திருவாரூர்: முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை ஷேக்தாவூத் ஆண்டவர் தர்காவின் 713ம் ஆண்டு கந்துாரி விழாவில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஜாம்புவான் ஓடையில், பிரசித்தி பெற்ற ஷேக் தாவூது ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் 713-வது ஆண்டு கந்துாரி விழா, கடந்த 20-ம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. நேற்று முன் தினம் இரவு 10.30 மணிக்கு புனித சந்தனக் கூடு ஊர்வலம் துவங்கியது. நள்ளிரவு 1.00 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சந்தனக்கூடு ஊர்வலம் ஆற்றங்கரை பாவா தர்ஹா, அம்மா தர்ஹா பகுதிக்கு சென்று மீண்டும் தர்ஹாவை மூன்று முறை சுற்றி வந்தடைந்தது. பக்தர்கள், பூக்களை சந்தனக்கூடு மீது துாவி பிரார்த்தனை செய்தனர்.