பதிவு செய்த நாள்
03
மார்
2015
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், கிழக்கு ராஜகோபுரத்தில் உள்ள பழைய கலசங்கள் நேற்று அகற்றப்பட்டன. புகழ் பெற்று விளங்கும் கோவில்களில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலும் ஒன்று. கடந்த 1995ம் ஆண்டு, இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம், இரண்டு கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் துவக்கப் பட்டன. கோவில் மூலவர் சன்னிதி, பங்காரு காமாட்சி, தர்மசாஸ்தா, ஆதிசங்கரர், உற்சவர் சன்னிதி, ராஜகோபுரம் ஆகியவற்றிற்கு பாலாலயம் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, கிழக்கு ராஜகோபுரத்தில் உள்ள பழைய ஏழு கலசங்கள், நேற்று அகற்றப்பட்டன. இதற்கு பதிலாக, புதிய கலசங்கள் பொருத்தப்படவுள்ளன.இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறுகையில், “கிழக்கு ராஜகோபுரத்தில் உள்ள பழைய கலசங்களை அகற்றிவிட்டு, புதிய கலசங்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு பணியாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜூலைக்குள் பணி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.