பதிவு செய்த நாள்
04
மார்
2015
11:03
கோவை : கோவை, கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் தேர்த்திருவிழா, ஜன.,17ல் பூச்சாட்டுடன் துவங்கியது. கடந்த, 1ம் தேதி காமதேனு வாகனத்திலும், நேற்று முன்தினம் வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்று மதியம், 2:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார். வரும், ஆறாம் தேதி தெப்பத்திருவிழாவும், ஏழாம் தேதி கொடியிறக்கமும் நடக்கிறது. 9ம் தேதி வசந்த விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.
இன்று தேரோட்டம் நடப்பதை முன்னிட்டு திருத்தேர் அலங்கரிக்கப்பட்டது. முன்னதாக திருத்தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, கோவை மாநகரில், இன்று காலை முதல் மாலை வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை: கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சுற்றுவட்டாரத்தில் செயல்படும், 10 பள்ளிகள், தேவைப்பட்டால் உள்ளூர் விடுமுறை அளித்துக்கொள்ளலாம், என, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவித்துள்ளார். அதேபோல், கோவை அரசு கலைக் கல்லுாரிக்கு மதியம், 1:50 முதல் மாலை, 6:50 மணி வரையிலான சுழற்சி-2 வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.