பதிவு செய்த நாள்
04
மார்
2015
12:03
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகள் பிறந்த நாள் விழாவில், ஏழு லட்சம் செவ்வாடை பக்தர்கள் நேற்று கலந்து கொண்டனர். அதிகாலை 4 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை 8 மணிக்கு, பெற்றோரின் படங்களுக்கு தீபாராதனை காட்டி, பங்காரு அடிகள் வழிபட்டார். மலர் அலங்கார ரதத்தில், அவரை ஊர்வலமாக அழைத்து வந்தபோது செவ்வாடை பக்தர்கள், ஓம்சக்தி, பராசக்தி என்று கோஷங்கள் எழுப்பினர். கலை நிகழ்ச்சிகளோடு ஊர்வலமாக வந்தனர். காலை 8:30 மணிக்கு, சித்தர் பீடம் வந்த அடிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.கருவறைக்கு சென்று, ஆதிபராசக்தி அம்மனை அடிகள் வழிபட்டார். பின், பிறந்த நாள் கேக் வெட்டி, மனைவி லட்சுமி, மகன்கள் செந்தில்குமார், அன்பழகன் மற்றும் பேரக் குழந்தைகளுக்கு அவர் ஊட்டினார்.
சிறப்பு அலங்கார மேடையில் அடிகள் அமர்ந்து, பக்தர்களுக்கு ஆசிவழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தணிக்காசலம் உட்பட நீதிபதிகள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை ரேவதி கிருஷ்ணா வீணை இசையும், காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் ராமநாதன் குழுவினர் சாக்ஸபோன் இசை நிகழ்ச்சியும் நடந்தது. ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி வளாகத்திலிருந்து, 3 கி.மீ., தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று, அடிகளிடம் ஆசி பெற்றனர். 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம், பழ வகைகள், குழந்தைகளுக்கு பால், பிஸ்கட், குளிர்பானங்கள், தண்ணீர் வழங்கப்பட்டன.ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க இளைஞர் அணி சார்பில், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் சேலம், நாமக்கல் மாவட்டங்களின் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.