திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு மூவலர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7 மணிக்கு திருவாராதனம், 8.15 மணிக்கு சாற்றுமறை நடந்தது. காலை 8.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள், சக்கரத் தாழ்வார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளினார். 10.30 மணிக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் வேதமந்திரங்கள் வாசிக்கப்பட்டது. 12.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஆண்டுதோறும் இத்தினத்தில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடக்கும் தீர்த்தவாரியில் பெருமாள் எழுந்தருள்வார். பெரிய கோபுரம் திருப்பணி துவங்கியதால் கோவில் வளாகத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது.