கடலூர்: கடலூர், தேவனாம்பட்டினத்தில் நேற்று நடந்த மாசி மக உற்சவத்தில் ஏராளமானோர் கடலில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மகம் நட்சத்திரமான நேற்று கடலூர், தேவனாம்பட்டினம் கடற்கரையில் பொதுமக்கள் பலர் அதிகாலையிலேயே கடலில் நீராடி பூஜை செய்தனர். தங்கள் முன்னோர்களுக்கு சரிவர திதி கொடுக்காதவர்கள், திதி கொடுத்து, அங்கு தீர்த்தவாரிக்கு வந்த சுவாமிகளுக்கு பூஜை செய்தனர். கடலூர் பகுதியில் பவுர்ணமி திதி அன்றே தீர்த்தவாரிக்கு சுவாமிகள் கடலுக்கு வரும் என்பதால், நேற்று குறைந்த அளவிலேயே சுவாமிகள் தீர்த்தவாரிக்கு வந்திருந்தன. இன்று கடலூர் பாடலீஸ்வரர் கோவில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி உள்ளிட்ட கோவில்களில் இருந்து சுவாமிகள் ஊர்வலமாக கடற்கரைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இந்தாண்டு மகம் இரண்டு நாள் நடைபெறுவதால், நேற்று கடற்கரையில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இருப்பினும், பொதுமக்கள் ஆர்வ மிகுதியில் கடலில் இறங்கி குளிப்பதைத் தவிர்க்க கடற்கரையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியினர் ஈடுபட்டிருந்தனர். மேலும், நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.