பதிவு செய்த நாள்
06
மார்
2015
12:03
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நிறுத்தப்பட்டிருந்த பேட்டரி கார் சேவை, நேற்று முதல் மீண்டும் துவங்கியது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். இதில், வயதான பக்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக, கோவில் நிர்வாகம் சார்பில், 2013ம் ஆண்டு பிப்ரவரியில், பேட்டரி கார் சேவை (மின்கல மகிழுந்து) துவக்கியது. இந்நிலையில் ஆறு மாதமாக, உரிய பராமரிப்பின்றி பேட்டரி காரின் பேட்டரிகள் பழுதடைந்ததால், கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நமது நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, கோவில் நிர்வாகம், பழுதடைந்த பேட்டரிகளுக்கு பதிலாக புதிய பேட்டரிகளை பொருத்தி, நேற்று காலை முதல், மலைக்கோவிலில் பேட்டரி கார் சேவையை மீண்டும் துவங்கியது. இதை, வயதான மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.