பதிவு செய்த நாள்
06
மார்
2015
12:03
மாமல்லபுரம்: பாரம்பரிய குலதெய்வ வழிபாட்டிற்காக, பழங்குடி இருளர்கள், மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர். தமிழகத்தின் வடக்கு, வட மேற்கு ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநில எல்லை பகுதிகளில், பழங்குடி இருளர்கள் வசிக்கின்றனர். குடும்பத்துடன் வந்தனர் வனப்பகுதியில் வசித்து வரும் அவர்கள், வாழ்வாதாரத்திற்காக, பாம்பு பிடித்து விஷ முறிவு மருந்து தயாரித்தும், விறகு சேகரித்தும், வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மாசி மக பவுர்ணமி அன்று, மாமல்லபுரம் கடற்கரையில், குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டு, விழா கொண்டாடுவது அவர்களின் பாரம்பரிய வழக்கம். வழிபாட்டிற்காக, இரு நாட்களுக்கு முன்பே, குடும்பத்துடன் வந்து, கடற்கரை மணல்வெளியில் சேலை மற்றும் வேட்டி ஆகியவற்றை தடுப்பாக கொண்டு அமைக்கப்பட்ட திடலில் தங்கி சமைத்து உண்டு, உறங்கினர். புனித நீராடல் பவுர்ணமியான நேற்று, சூரிய உதயத்திற்கு பின், கடலில் நீராடி, மணலில் வழிபாட்டு திட்டு உருவாக்கி, கன்னியம்மனை எழுந்தருளச் செய்து வழிபட்டனர். ஏராளமானோர், தலைமுடி காணிக்கையுடன், காது குத்தல் உட்பட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் திருமணமும் செய்து கொண்டனர்.