பதிவு செய்த நாள்
06
மார்
2015
01:03
திருப்பதி: திருமலையில் உள்ள, சங்கு தீர்த்த குளம் சாக்கடையாக மாறி வருகிறது.திருமலையில், சேஷாசல வனப்பகுதியில், ஏராளமான தீர்த்தங்கள் உள்ளன. இதில், சில தீர்த்த குளங்கள் முக்கியமானவை.பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில் உள்ள, ஆகாய கங்கை தீர்த்தத்தில் இருந்து, நீர் கொண்டு வந்து, தினமும் காலை, ஏழுமலையானுக்கு, திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு, மிக அருகில் உள்ளது, சங்கு தீர்த்த குளம் சங்கு வடிவில் உள்ளதால் அப்பெயர் பெற்றது. அந்த பகுதி, சங்குமிட்டா என்றும் அழைக்கப்படுகிறது.முன், திருமலைக்கு வரும் பக்தர்கள், இந்த தீர்த்த குளத்தை வலம் வந்து, அதன் நீரை, தலையில், தெளித்து கொள்வர். போதிய பராமரிப்பு இல்லாததால், அந்த தீர்த்த குளம், சாக்கடையாக மாறி வருகிறது. பக்தர்கள் பலர், அதன் அருகில் மலம் கழிப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. காய்ந்த இலைகள், குளத்தில் விழுவதால், நீர் முழுவதும் மாசு அடைந்துள்ளது.இந்த குளத்தை, தேவஸ்தானம், சுத்தம் செய்து, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.