பதிவு செய்த நாள்
17
மார்
2015
10:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் மூன்று நாள் தெப்போற்சவம், நேற்று முன்தினம் இரவு தாயார் குளத்தில் துவங்கியது.
சைவ தலங்களில் சிறப்பு பெற்று விளங்கும் கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில் தெப்போற்சவம், ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். அதன்படி, மூன்று நாட்கள் நடைபெறும் உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது. மாலை 6:35 மணியளவில், சுந்தராம்பிகையுடன் கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு ராஜ வீதி, காமராஜர் வீதி, கருக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு வழியாக தாயார் குளத்திற்கு, இரவு 8:30 மணியளவில் வந்தடைந்தார். குளத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, மூன்று சுற்று சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரண்டாம் நாளான நேற்று இரவு ஐந்து சுற்று சுற்றிய சுவாமி, மூன்றாம் நாளான இன்று, ஏழு சுற்று சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று, இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கச்சபேஸ்வரரை வழிபட்டனர்.