கும்பகோணம்: நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவிலில் இன்று விடையாற்றி விழா நடக்கிறது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. அம்மனுக்கு என்று தனி கோவில் கிடையாது. ஆனால், ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் உற்சவங்கள் பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தனது பக்தன் மீது கொண்ட பாசத்தால் சமயபுரத்தாள் திருநரையூர் எனும் நாச்சியார் கோவிலுக்கு வந்ததாக வரலாறு. வைகாசி மாதம் அமாவாசையை அடுத்த வெள்ளி தொடங்கி 10 நாட்களுக்கு ஆகாச மாரியம்மன் உருவத்தை தர்ப்பையால் உருவாக்கி விழா நடக்கிறது. மற்ற நாட்களில் ஆகாச மாரியம்மனுக்கு திருஉரு கிடையாது. கோவிலும் கிடையாது. அந்த சன்னதியில் அகல் விளக்கு மட்டும் ஜோதிச்சுடராக எரிந்து கொண்டிருக்கும். சாதாரண வளையல் வணிகரின் பக்திக்காக சமயபுரத்தாள் திருநரையூருக்கு எழுந்தருளினாள். இன்றும் அத்திருவிழா பக்திப் பெருக்கின் உன்னத காட்சியாக தொடர்கிறது. திருநரையூரில் அம்மாவிற்கென்று கோவில் கிடையாது. விழாக்காலம் நீங்கலாக மற்ற நாட்களில் அணையா விளக்காக காட்சி தருவாள். பக்தர்களும் வழிபட்டு வருவார்கள். பத்து நாட்கள் செப்புக்குடத்தில் உள்ள நீரினையும் எலுமிச்சைப்பழத்தையும் குழந்தைப்பேறு இல்லாதோர் அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இவ்வாண்டு திருவிழா கடந்த 1ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 3ம் தேதி இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருநரையூர் செங்கழுநீர் விநாயகர் கோவிலிருந்து அம்பாள் கோவில் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த 4ம் தேதி அதிகாலை கோவிலை நெருங்கியதும் பல்லக்கிலிருந்து அம்பாள் கோவிலுக்கு மூட்டை, மூட்டையாக மல்லிகை பூக்களை தூவி வரவேற்றனர். திரளான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை தரிசனம் செய்தனர். அன்று முதல் கோவிலில் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தும், அங்கபிரதட்சனை செய்தும், மாவிளக்கு போட்டும் திரளான பக்தர்கள் பிரார்த்தனை நிறைவேற்றினர். நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் அம்பாள் சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 10ம் தேதி அம்பாள் அந்தம் வரை வளர்ந்து ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்துடன் சேவை சாதித்து அருள்தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 12ம் தேதி காலை முதல் சகல பிராத்தனைகளும், காவடி வைபவங்களும், அங்க பிரதட்சணங்களும், மாவிளக்கு போடுதலும் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தத்தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர். கடந்த 16ம் தேதி அதிகாலை தேரில் அம்பாள் சமயபுரத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி வீதியுலா நடந்தது. நாச்சியார்கோவில் பஞ்சாயத்து சார்பில் திருவிழாவிற்கு சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விழா நாட்களில் கூடுதலாக செய்திருந்தனர். விழா நிறைவாக இன்று விடையாற்றி விழா நடக்கிறது. இன்று இரவு 8 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு படையல் போடப்பட்டு விசேஷ ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் துரை சீனிவாசன், அறங்காவலர்கள் பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.