பதிவு செய்த நாள்
26
மார்
2015
11:03
மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமி கோவிலில், பங்குனி பிரம்ம உற்றவத்தின், 16ம் நாள் திருவிழாவான வெண்ணெய்த்தாழி உற்சவம் நேற்று நடந்தது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீவித்ய ராஜகோபாலன் மீது வெண்ணெயை வீசி வழிபாடு செய்தனர். பங்குனி பிரம்ம உற்சவத்தின் போது, ஒவ்வொரு நாளும் ராஜகோபால ஸ்வாமி பல் வேறு அலங்காரத்தில், பல விதமான வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார். 16ம் நாள் திருவிழாவாக, நவநீத ஸேவை என்ற வெண்ணெய்த்தாழி உற்சவம் நடைபெற்றது. நேற்று, வெள்ளிக்குடம் கையிலேந்தி, ஸ்ரீவித்ய ராஜகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.காலை, 8.15 மணிக்கு கோவிலிருந்து வீதி உலா துவங்கியது. வீதிகள் தோறும் பக்தர்கள் திரண்டு, வெண்ணெயை ராஜகோபாலன் மீது வீசி, வழிபட்டனர். மாலை, 3 மணிக்கு வெண்ணெய்த்தாழி மண்டபத்தில், ராஜகோபாலனுக்கு செட்டி அலங்காரம் செய்யப்பட்டது. இரவு, 7 மணிக்கு ராஜ கோபால ஸ்வாமி, மீண்டும் ராஜ அலங்காரத்தில் வெட்டுங்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடை பெற்றது. மேலும், வாண வேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.