சரஸ்வதி பூஜையின்போது புத்தகங்களை சரஸ்வதியின் முன் வைத்து வழிநடுகிறோம். அவளது அருள் இருந்தால் மட்டுமே லட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என நம்புகிறோம். ரிக் வேதத்தில் சரஸ்வதி நதியாகப் போற்றப்படுகிறாள். அக்னி, வாயு, வருணன், இந்திரனுக்கு இணையாக சரஸ்வதி நதி துதிக்கப்படுகிறாள். அவள் தூய்மையானவள். உயிர் அளிப்பவள். அறிவொளி அளிப்பவள். இந்திய நாகரிகம் தோன்றியது சரஸ்வதி நதிக்கரையில் என்பர். இதன் காலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மிகமிகப்பழமையான தெய்வம், சரஸ்வதி. (சரஸ்வதி நதி காணாமல் போனாலும், அதன் பாதை நாசா எடுத்த புகைப்படத்தில் தெரிகிறது.) உலகை சிருஷ்டி செய்யும் பொறுப்பை பிரம்மாவிடம் ஒப்படைத்தார், பரமாத்மா. அந்த பிரம்மாவின் பத்தினிதான் சரஸ்வதி. ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்தில் சிருங்கேரியில் சரஸ்வதி உபயபாரதி என்ற பெயருடன் அவதரித்ததாக நம்பப்படுகிறது. அவரது கணவரான மண்டனமிரஸ்ரருக்கும் ஆதிசங்கரருக்கும் இடையே தர்க்க விவாதம் ஏற்பாடானது. சகல ஞானமும் கற்றவளான உபயபாரதி எனும் சரஸ்வதியையே நடுவராக இருவரும் ஏற்றுக்கொண்டனர். பாரதி இருவருக்கும் மாலையை அணிவித்து விட்டு, யார் தத்துவார்த்த தர்க்க விவாதத்தில் தோல்வியடைகிறார்களோ அவரது பூமாலை வாடிவிடும் என்றாள். தர்க்கத்தில் ஆதிசங்கரர் வெற்றி பெற்றார். மண்டனமிஸ்ரர் துறவறம் ஏற்றுக்கொண்டார். சரஸ்வதியின் மகிமையைப் புரிந்துகொண்ட ஆதிசங்கரர், அவள் புகழ்பாடியதோடு ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்தார். சரஸ்வதி வெள்ளை ஆடையில், வெள்ளை தாமரையில் வீற்றிருக்கிறாள். அவளது வாகனமான அன்னமும் வெள்ளை. வீணை, ஜபமாலை, வேதம் என அறிவு சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கும் கலைவாணி வெள்ளையை ஏன் தேர்ந்தெடுத்தாள்? அனைத்து நிறங்களின் பிறப்பிடமும் வெள்ளைதான். இது விஞ்ஞானபூர்வ உண்மை. வெள்ளை தூய்மையைக் குறிக்கிறது. நம் சிந்தனை, சொல், செயல் மூன்றும் தூய்மையாக, சத்தியமாக இருக்க வேண்டும். எனவேதான் சரஸ்வதி வெள்ளை தாமரையில், வெள்ளை ஆடையுடன் நமக்குக் காட்சி தருகிறாள்.