தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்ட ஸ்வாமிகள், திருச்செந்தூர் கடலில் உயிர்விடத் தீர்மானித்து அந்தத் தலத்தை அடைந்ததாகவும், அன்று ஸ்ரீகந்த சஷ்டி ஆரம்ப நாளாக இருந்ததால், ஸ்வாமியைத் தரிசித்துவிட்டு சமுத்திரம் புகலாம் என்றெண்ணி அவர் கோயிலை வலம் வந்து முடிக்க, நோய் குணமானதாகக் கூறுவர். உடனே, ஒரு நாளைக்கு ஒரு கவசமாக, அறுபடை வீடுகளுக்கும் ஆறு கவசங்களை அவர் பாடியருளியதாக் கூறுவர். தவிரவும் கிருத்திகை கவசம், சூதசம்ஹிதை, குசேலோபாக்கியானம், சத்ருசம்ஹாரவேல் பதிகம், சாமுண்டிப் பதிகம், பஸவண்ண பாசுரம் முதலான நூல்களையும் அருளியதாகத் தகவல்கள் உண்டு. இவர் கந்தர் சஷ்டி கவசம் பாடியது சென்னிமலையில் என்று அந்த ஊர் தலபுராணம் விவரிக்கிறது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவரான வல்லூர்த் தேவராசரும், ஸ்ரீலஸ்ரீ தேவராய ஸ்வாமிகளும் ஒருவரே என்றும் சிலர் கூறுவர்.