பதிவு செய்த நாள்
27
ஜூன்
2011
10:06
மதுரை :மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபத்தில் ஒருமாதத்திற்குள் கடைகளை அப்புறப்படுத்தி சிற்பங்களை பாதுகாக்க, கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் நேற்று சுற்றுலா தொடர்பான பகுதிகளை கலெக்டர் சகாயம் பார்வையிட்டார். காலையில் மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள புதுமண்டபத்திற்கு சென்றார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், நேர்முக உதவியாளர் ஜெயசிங்ஞானதுரை, சுற்றுலா அதிகாரி தர்மராஜ், தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வாசிமலை, பொதுப்பணித் துறை பொறியாளர் அப்துல்ரஷீத், சி.ஐ.ஐ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதுமண்டபத்திற்குள் நான்கு வரிசையில் அரிய பல சிற்பங்கள் உள்ளன. அவை அங்குள்ள தையல், வளையல், பாத்திரக் கடை வியாபாரிகளால் மறைக்கப்பட்டுள்ளன. இதனால் யாரும் அவற்றை பார்வையிட முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து விசாரித்தார் கலெக்டர். அரிதான இச்சிலைகளை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், ஒரு மாதத்திற்குள் கடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி கமிஷனரிடம் கூறினார். பின் குன்னத்தூர் சத்திரத்தில் கட்டடம், தேர்நிறுத்துமிடம், மொட்டை கோபுரத்தை பார்வையிட்டார். அங்கிருந்து பத்து தூண் சந்து, பத்திர பதிவுத்துறை அலுவலகத்தை பார்த்தார். "மதுரையில் நூறு ஆண்டுகளுக்கு மேலான கட்டடங்களை பாதுகாக்க வேண்டும், என அதிகாரிகளிடம் தெரிவித்தார். மகாலை பார்வையிட்ட அவர், சுத்தமாகவும், குடிநீர் வசதியுடனும் வைத்திருப்பது, ஒலி, ஒளி காட்சியை நடத்தவது குறித்தும், ஆலோசனை வழங்கினார். பின் வண்டியூர் சென்று பார்வையிட்ட அவர், ""இங்கு படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியளவிலாவது ஏற்பாடு செய்யுங்கள், என்றார்.
பத்திரிகைகளையும் அழைக்கலாமே : மதுரையில் கலெக்டர் சகாயம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, பொதுமக்கள் பாராட்டுகின்றனர். தொடர்ந்து தினமலர் வெளியிட்டு வரும் பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தற்போது தீர்வு கிடைக்கிறது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், அரசு ஆஸ்பத்திரி, உரக்கடைகளில் சோதனை, புதுமண்டபம், மகால் பகுதிகளில் "விசிட் என கலெக்டர் கலக்குகிறார். அவருடன் அதிகாரிகளை அழைத்துச் செல்கிறார். என்றாலும் அவரது ஆலோசனை கூட்டங்கள், "விசிட்டுகளுக்கு பத்திரிகையாளர்களை தவிர்த்து விடுகிறார். கலெக்டர் அதிரடி "விசிட் செய்யும்போது, அப்பகுதி பிரச்னைகளை அதிகாரிகள் முழுமையாக சொல்வார்களா? தீர்வு காணப்படாத பிரச்னைகள் பற்றி பத்திரிகையாளர்களுக்கு தெரியும். இதனையே செய்தியாகவும் தருகின்றனர். நேற்று தொன்மையான கட்டடங்கள், சுற்றுலா பகுதிகளில் விசிட் நடத்தியபோது, தானம் அறக்கட்டளை, தொழிற் கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்துச் சென்றார். அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்திருக்கலாம். கலெக்டர் நடவடிக்கைகள், நாளிதழ்களில் வெளியானால் பொதுமக்களின் ஒத்துழைப்பு கூடுதலாக கிடைக்கும்.