பதிவு செய்த நாள்
27
ஜூன்
2011
10:06
திற்பரப்பு : திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலில் நடந்த தேவபிரசனத்தில் கோயில் மூலஸ்தானத்தில் பூஜைகள் செய்யப்படவில்லை, பண்டை காலங்களில் செய்து வந்த ஆசாரா அனுஷ்டானங்கள் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என தெரியவந்தது. குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற 12 சிவாலயங்களில் நான்காவது சிவாலயமான திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயில் மிகவும் பழமைவாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் சரியான பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. தற்போது சிறிய அளவிலான பராமரிப்பு பணிகள் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகத்தினரால் செய்யப்பட்டு வருகிறது. இக்கோயிலில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல குறைகளுடன் காணப்படும் பெருமை வாய்ந்த இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு பரிகார பூஜைகள் செய்து, கும்பாபிஷேகம் செய்யும் வகையில் தேவபிரசனம் கோயில் வளாகத்தில் நடந்தது. முதலாவதாக கோயில் வளாகத்தில் ராசிபூஜை செய்து பேயோடு பிரமோத் நாராயணன் தேவபிரசனம் ஆரூடம் கணித்தார். கோயில் முக்கிய மூர்த்தியான சிவன் கோபத்துடன் இருக்கிறார். மேலும் இக்கோயிலுக்கு தானமாக கிடைத்த பொருட்கள் யாரிடமோ தற்போது உள்ளது.
கோயில் உபமூர்த்திகளின் சிலைகளில் குறைபாடுகள் காணப்படுகிறது. கோயிலின் அருகே உள்ள குகைக்கோயிலில் இக்கோயிலின் மூலஸ்தானம் உள்ளதாகவும், அங்கு சரியான பூஜைகள் செய்த பின்பே கோயிலில் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும், இல்லாத பட்சத்தில் குறைகளை நிவர்த்தி செய்ய முடியாது என்றும் கூறப்பட்டது. இங்கு தேவிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதாகவும், ஆனால் தற்போது தேவிக்கு பூஜைகள் செய்யப்படவில்லை. சிவன், பார்வதி மற்றும் கணபதி குடும்ப சமேதராக காட்சி தருகின்ற இடமாகவே இக்கோயில் உள்ளது எனவும் தெரியவந்தது. பார்வதிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் சிவேலி உட்பட சிறப்பு பூஜைகளும், உப தேவதைகளுக்கு சரியான பூஜைகளும் நடக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இக்கோயில் கணபதி சைதன்னியம் மிக அதிகமாக காணப்படுவதாகவும், சரியான பூஜைகள் கண்டிப்பாக கணபதிக்கு செய்ய வேண்டுமென்றும், வரும் காலத்தில் சுற்றுவட்டாரங்களில் மிகவும் பிரசித்திபெற்ற கணபதி சன்னதி இங்கு அமையும் எனவும் தேவபிரசனத்தில் கூறப்பட்டது. கோயிலின் சற்று தூரத்தில் உள்ள நந்திமங்கலம் மகாவிஷ்ணு கோயிலுக்கும், இக்கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், பண்டை காலத்தில் இக்கோயிலில் இருந்து ஆறாட்டுக்கு நந்திமங்கலம் கோயிலின் அருகே உள்ள கூடல்கடவில் சென்று ஆறாட்டு நடந்து வந்ததாகவும் தெரியவந்தது. இதில் உள்ள இடையூறுகளை நீங்கி பின்பற்றி வந்ததால் சிறந்தது என தெரிவிக்கப்பட்டது. கோயில் ஊழியர்கள் உட்பட பலர் வேதனையுடன் கோயிலில் காணப்படுவதாகவும், அதற்கு பரிகாரம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கோயிலில் தற்போது நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளால் தேவன் கோபமாக உள்ளதாகவும், பண்டைய காலங்களில் நடத்திவந்தது போல் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். ஆசார அனுஷ்டானங்களுக்கு மாறாக புதுமுறைகளை நடைமுறைப்படுத்தக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்டுள்ள குறைகளுக்கும், பூஜைகளில் ஏற்பட்டுள்ள தவறுகளுக்கும் மேற்கொண்டு செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து விளக்கப்பட்டது. காலை துவங்கிய தேவபிரசனம் மாலை வரை நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் தந்திரி சங்கரநாராயணரூ, கோயில் ஸ்ரீகாரியம் ஷண்முகம் பிள்ளை, நந்தீஸ்வரா சேவா சங்க தலைவர் நாகப்பன் நாயர், துணைத்தலைவர் சசிதரன் நாயர், செயலாளர் மனோகரன், பொருளாளர் சதாசிவன் நாயர், நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.