கோயில்களின் தொட்டுத் தொடரும் நேர்த்திக்கடன் அருவா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2015 11:03
திருப்புவனம்: திருப்பாச்சேத்தி அருவா தயாரிப்பிற்கு புகழ்பெற்றது. பல்வேறு பிரச்னைகளால் தயாரிப்பு குறைந்தாலும் கோயில்களுக்குச் செலுத்தும் நேர்த்திக்கடன் அருவா தயாரிப்பு இன்றும் தொடர்கிறது. திருப்பாச்சேத்தியில் பாரத் என்ற தொழிலாளி சக தொழிலாளர்களுடன் 18 அடி உயரத்தில் நேர்த்திக்கடன் அருவா தயாரித்துள்ளார்.அரிவாள் தயாரிப்பு குறித்து பாரத் கூறுகையில் ; மண்வெட்டி, கோடாரி, அரிவாள், கதிர் அரிவாள் உள்பட பல்வேறு விவசாய கருவிகள் தயாரித்து வந்தோம். நாளடைவில் இயந்திரமயமாகி விட்டதால் விவசாய கருவிகளின் பயன்பாடு குறைந்து விட்டது. தற்போது மாரநாடு கருப்பண்ணசாமி, மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு ஆண்டாண்டு காலமாக நேர்த்திக்கடன் அருவா தயாரித்து வருகிறோம். அடிக்கு ஆயிரத்து 500 ரூபாய் என பக்தர்களின் வேண்டுகோளின் படி அருவா தயாரித்து தருகிறோம். 18 அடி உயர அருவா தயாரிக்க குறைந்தது 20 நாட்களாகும். மதுரையில் இருந்து இரும்பு பட்டைகளை வாங்கி தயாரிக்கிறோம். கைப்பிடி மட்டும் இரண்டரை அடி நீளம் இருக்கும். அருவா, கைப்பிடிகளில் பெயின்ட் அடித்து வெண்கல மணி பொருத்தி தருகிறோம், என்றார்.சென்னை பக்தர் மணிகண்டன் கூறுகையில்; ஐந்து ஆண்டுகளாக மதுரை அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமிக்கு 18 அடி உயரத்தில் அருவாளை நேர்த்திக்கடனாக செலுத்தி வருகிறேன். தென் தமிழகத்தில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி வேண்டும் வரம் தருபவர் என்பதால், தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறேன், என்றார்.