பதிவு செய்த நாள்
30
மார்
2015
11:03
மயிலாப்பூர்: கபாலீஸ்வரர் கோவில் அதிகார நந்தி வாகன வீதியுலாவை, ஆயிரக்கணக்கானோர் திரண்டு தரிசித்தனர். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் மூன்றாம் நாளான கடந்த, 3௮ம் தேதி, காலை 9:௦௦ மணிக்கு, அதிகார நந்தி வாகன காட்சி நடந்தது. அன்று காலை ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு, கோபுர தரிசனம் கண்டனர். அன்று பிற்பகல், 3.30 மணிக்கு, அதிகார நந்தி வாகன வீதியுலா நிறைவு பெற்றது. அதையடுத்து அன்று இரவு, பூதம், பூதகி, தாரகாசுர வாகனங்களில், சுவாமி வீதியுலா நடந்தது. நான்காம் நாளான நேற்று, காலை புருஷா மிருக வாகனத்தில் கபாலீஸ்வரர், சிங்க வாகனத்தில் கற்பகாம்பாள், புலி வாகனத்தில் சிங்கார வேலர் வீதியுலா நடந்தது. இரவு 9:௦௦ மணிக்கு நாகம், காமதேனு, ஆடு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.
சுருதி மறை வேள்வி மிக்க மயிலை நகர்: தமிழகத்தின் மிகத் தொன்மையான நகரங்களுள், மயிலாப்பூரும் ஒன்று. கி.பி., ௧௪௦ல் இந்தியாவுக்கு வந்த டாலமி என்ற கிரேக்க யாத்ரீகர், மயிலாப்பூரை, ’மைலார்பன்’ என குறிப்பிட்டுள்ளதாக, வரலாற்று அறிஞர் மா.இராசமாணிக்கனார் எழுதி உள்ளார். டாலமியை அடுத்து, கி.பி., ௬ம் நுாற்றாண்டில் வாழ்ந்திருந்த, மூன்றாம் சிம்மவர்மன் என வரலாற்று அறிஞர்களால் கருதப்படும், ஐயடிகள் காடவர் கோன், மயிலைக்கு என தனிப் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
குயிலொத் திருள்குஞ்சி கொக்கொத் திருமல்
பயிலப் புகாமுன்னம் நெஞ்சே -மயிலைத்
திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில்
இருப்பின்னை யங்காந் திளைத்து.
இது, பதினோராம் திருமுறையில், க்ஷேத்திரத் திருவெண்பா என்ற தலைப்பில், ௧௨வது வெண்பாவாக இடம் பெற்றுள்ளது. திருமழிசை ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும், மயிலாப்பூரை சேர்ந்த சிற்றுாரே, திருவல்லிக்கேணி என்ற பொருள்பட, ’மாமயிலை மாவல்லிக்கேணி யான்’ என்றும், ’நன்மயிலைத் திருவல்லிக்கேணி’ என்றும் பாடியுள்ளனர். கி.பி., ௭ம் நுாற்றாண்டில் வாழ்ந்த, திருநாவுக்கரசர், ’மயிலாப்பு, மயிலாப்பில்’ என, குறிப்பிடுகிறார்.
வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம்
வருவாரை எதிர்கண்டோம் மயிலாப்புள்ளே
மங்குல் மதி தவழும் மாடவீதி
மயிலாப்பில் உள்ளார்
மயிலாப்பில் மன்னினார்
என, அவர் குறிப்பிடுகிறார்.
அவரது சமகாலத்தவரான, திருஞானசம்பந்தர், இந்த தலத்தில் வாழ்ந்து இறந்து போன பூம்பாவையை, உயிர்ப்பிப்பதற்காக பாடியது தான்,
’மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை’ என்று தொடங்கும், ௧௦ பாடல்கள். அவரையடுத்து, சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் பாடிய, திருத்தொண்டத் தொகையில்,
துறைக் கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதி
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
என, வாயிலார் நாயனார், மயிலாப்பூரில், வாழ்ந்ததை குறிப்பிடுகிறார்.
கி.பி., ௧௧ம் நுாற்றாண்டில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி, திருத்தொண்டர் திருவந்தாதியில்,
மாறா அருள்அரன் தன்னை மன ஆலயத்து இருத்தி
ஆறா அறிவாம் ஒளிவிளக்கு ஏற்றி அகமலர்வாம்
வீறா மலரளித்து அன்பெனும் மெய்யமிர்தம் கொடுத்தான்
வீறார் மயிலையுள் வாயிலான் என்று விளம்புவரே
என, மயிலையை குறிப்பிடுகிறார்.
சேக்கிழாரின் பெரியபுராணத்தில், பூம்பாவையை திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்த வரலாறு, ௮௮ பாடல்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.அருணகிரிநாதர் இந்த தலத்துக்கு, ௧௦ திருப்புகழ் பாடல்களை அருளிச் செய்துள்ளார். அவற்றில்,
சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர
துரகதக லாப பச்சை மயில்வீரா
அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப
அருள்பரவு பாடல் சொற்ற குமரேசா
என, முருகனே திருஞானசம்பந்தராக வந்து பூம்பாவையை உயிர்ப்பித்ததாக கூறுகிறார். கி.பி., ௧௭ம் நுாற்றாண்டை சேர்ந்த, படிக்காசுப்புலவர், தாம் பாடிய தொண்டை மண்டல சதகத்தில், கபாலீஸ்வரர், பூம்பாவை, வாயிலார் பற்றிகுறிப்பிட்டுள்ளார். சூடாமணி புலவர் தாம் இயற்றிய, வைசிய புராணத்தில், நகர சருக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த தலத்திற்கு, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தை சேர்ந்த அமிர்தலிங்கத் தம்பிரான் இயற்றியது, மயிலை நாதமுனி முதலியார் இயற்றிது என, இரண்டு தலபுராணங்கள் உள்ளன. சமஸ்கிருதத்தில், மயூரபுரி புராணம் என்ற பெயரில் ஒரு தலபுராணம் உள்ளது. திருமயிலை உலா, திருமயிலை கலம்பகம், திருமயிலை பிள்ளைத்தமிழ், திருமயிலை கோவை, திருமயிலை உவமை வெண்பா, திருமயிலை வெண்பா, திருமயிலை யகம அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, திருமயிலை நான்மணிமாலை, கபாலீச்சுரர் பஞ்சரத்தினம், கற்பகவல்லி மாலை, சிங்காரவேலர் கும்மி, வெண்பாமாலை என, 26 வகையான சிற்றிலக்கியங்கள், மயிலாப்பூர் மீது பலரால் பாடப்பட்டுள்ளன.- நமது நிருபர் -