ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் குறித்து அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திர பாலாஜி ஆய்வு செய்தனர். ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலுக்கு 2012ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விமானக் கோபுரத்தினை தங்கக்கோபுரமாக அமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 76 கிலோ தங்கத்தில் விமானம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதுவரை நன்கொடையாளர்கள் மூலம் 49 கிலோ தங்கம் பெறப்பட்டு பணிகள் நடந்துள்ளன. இன்னும் 27கிலோ தங்கம் தேவைப்படுகிறது. வடபத்ரசாயி சன்னதியிலும் திருப்பணிகள் நடந்து வருகிறது.
அமைச்சர்கள் ஆய்வு: இந்நிலையில் அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திரபாலாஜி, அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி, கலெக்டர் ராஜாராமன், அதிகாரிகள் நேற்று ஆண்டாள் கோயில் திருப்பணிகளை ஆய்வு செய்தனர் . ரூ.45 லட்சத்தில் ராஜகோபுரத்துக்கு வர்ணம் பூசுதல், ரூ.20 லட்சத்தில் ராஜகோபுர கல்காரப் பணிகள், ரூ.26 லட்சத்தில் இதர பணிகள் நடந்துள்ளன. ரூ .115 லட்சம் செலவில் இதர உபயத்திருப்பணிகள் நடக்கிறது. இது குறித்து தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா விளக்கமளித்தனர். அனைத்துப்பணிகளையும் விரைந்து முடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்திட அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. மே 22 வெள்ளிக்கிழமை அதற்கு நாள் குறித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.