பதிவு செய்த நாள்
31
மார்
2015
11:03
திருத்தணி: இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, நாகேஸ்வரன் சுவாமி கோவில், பராமரிப்பு இல்லாமல் கோபுரத்தின் மீது செடிகள் வளர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. திருவாலங்காடு ஒன்றியம், பொன்பாடி பகுதியில், உமாமகேஸ்வரி சமேத நாகேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும், இக்கிராமவாசிகள் சென்று வழிபட்டு வருகின்றனர். இதுதவிர, ஒவ்வொரு மாதமும் நடக்கும் பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் முக்கிய திருவிழாக்களின் போது, பொன்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். இந்து அறநிலைய துறையின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தினமும் ஒரு காலபூஜை மட்டும் நடக்கிறது. கோவில் வளாகம் மற்றும் கோபுரத்தை உரிய முறையில் பராமரிக்காததால், தற்போது கோபுரத்தின் மீது செடிகள் வளர்ந்து, சிலைகள் ÷சதம் அடைந்துள்ளன. மேலும், கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் நடப்பதாக, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது, கோவில் கோபுரம் மற்றும் கட்டடம் பழுதடைந்துள்ளதால், எந்த நேரத்திலும் இடித்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, பக்தர்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட துறையினர் கோவிலை சீரமைத்து, திருப்பணிகள் நடத்தி, மகா கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, அப்பகுதி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.