பதிவு செய்த நாள்
31
மார்
2015
12:03
சிவாலயத்துக்கும் சிவனடியார்களுக்கும், தொண்டு செய்வதே சிவத்தொண்டு. அதை நிறைவேற்றி காட்டியவர்கள் 63 நாயன்மார்கள். அவர்கள் வழியில் இன்றும் எத்தனையோ அடியார்கள் சிவத்தொண்டு செய்து வருகின்றனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், அடியார்கள் பல அமைப்புகளாக திரண்டு, பற்பல தொண்டுகளை ஆற்றி வருகின்றனர். நந்தவன பணி மயிலாப்பூர் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில், தனி நந்தவனம் அமைத்து, அங்கிருந்து தினசரி, பூக்களை பறித்து, அவற்றை அழகாக தொடுத்து, கபாலீஸ்வரருக்கு நாள் தவறாது, சாற்றி வருகிறார், மயிலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், 40. கடந்த 2001ம் ஆண்டில் இருந்து இந்த திருப்பணியை செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கடந்த 15 ஆண்டுகளாக, இந்த பணியை செய்து வருகிறோம். நந்தியாவட்டை, தங்க அரளி என்று முப்பதுக்கும் அதிகமான செடிகளை வளர்த்து வருகிறோம்,’’ என்றார்.மயிலையில் ஓர் கிரிவலம்மயிலையில் பக்தி வலமாய், கிரிவலம் வருகிறது ஒரு அடியார் குழு. பவுர்ணமி வழிபாட்டு பக்தர்கள் குழு, என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட அந்த அமைப்பில் தற்போது, ௫௦௦க்கும் அதிகமான பக்தர்கள் சேர்ந்து, ஒவ்வொரு பவுர்ணமி தோறும், மயிலையில் கிரிவலம் வருகின்றனர்.
இதுகுறித்து, அந்த அமைப்பின் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பவுர்ணமி தோறும், இரவு, 6:45 மணிக்கு, கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள அண்ணாமலையார் சன்னிதியில் இருந்து, வேதகோஷம், பஜனை, நாமாவளி சங்கீர்த்தன இன்னிசையுடன் துவங்கும் கிரிவலம், நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து மீண்டும் கோவிலை அடைகிறது. மயிலையில் கிரிவலம் வந்த பலரும், பல நன்மைகளை தங்கள் வாழ்வில் கண்டிருப்பதாக சொல்கின்றனர்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். உழவார திருப்பணி திருக்குழு ஆலயத்தை சுத்தம் செய்வது, திருக்குளத்தை சீர்செய்வது, வண்ணம் தீட்டுவது, அன்னதானம் வழங்குவது என, இறைவன் திருப்பணியில் தன்னை அர்ப்பணித்து வருகிறது, திருமயிலை உழவார திருப்பணி திருக்குழு சங்கம்.
அந்த அமைப்பின், சாய்நாத் பிரபு கூறியதாவது: கடந்த, 1995ல் மயிலாப்பூரைச் சேர்ந்த லட்சுமணனால், இந்த அமைப்பு துவங்கப்பட்டது. 230 அடியார்கள், உழவார பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாப்பூர் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளாக உழவார பணி செய்கிறோம். மயிலை திருவிழாவில், கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவது, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது என, பொது சேவையிலும் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார். கற்பகம் சுவாசினி சங்கம் மயிலை கற்பகாம்பாளை, கடந்த 40 ஆண்டுகளாக, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறது, கற்பகம் சுவாசினி சங்கம்.இதில், 100க்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். இந்த அமைப்பினர், 1008 தங்க காசுகளில், லலிதா சகஸ்ரநாமத்தை எழுதி, அதை காசு மாலையாக கற்பகாம்பாளுக்கு சாற்றி இருக்கின்றனர். பிரதி வெள்ளிக்கிழமை, அந்த மாலை, கற்பகாம்பாள் மூலவருக்கு சார்த்தப்படுகிறது. இந்த அமைப்புகளை போல, மயிலையில், திருப்புகழ் சபை, தேவார சபை, மயிலை பக்த ஜன சபா போன்ற அமைப்புகளும், கபாலீஸ்வரர் கோவிலில் தொண்டாற்றி வருகின்றன.