பதிவு செய்த நாள்
01
ஏப்
2015
11:04
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு, கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், கோ பூஜை, ஷோடச கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
அடுத்தக்கட்டமாக, யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கியது. காலை 8:00 மணிக்கு, விநாயகர் திருமண மண்டபத்தில் கஜ பூஜை, அக்னி சங்கிரகணம், யாக சாலை அலங்காரம் ஆகியன நடந்தது.
சிறப்பு பூஜை: விநாயகர் திருமண மண்டப மேடையில், சித்தி புத்தி சமேத விநாயகர், பரிவார மூர்த்திகள், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
மூல மந்திர ஹோமம்: தொடர்ந்து, யாக சாலை மண்டபத்தில் தானியங்கள் கொட்டப்பட்டும், கலசங்கள் தயார் செய்யப்பட்டும், யாகசாலை அலங்கரிக்கப்பட்டது. யாகம் வளர்க்கும் சிவாச்சாரியார்களுக்கு, காப்புக் கட்டுதல் நிகழ்வு நடந்தது. மாலை 6:00 மணிக்கு, கும்ப அலங்காரம், யாத்ரா தானம், முதற்கால யாக பூஜை, மூல மந்திர ஹோமம் நடந்தது.
கொலுசுடன் லட்சுமி: கஜ பூஜையையொட்டி, லட்சுமி யானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலில் வெள்ளிக் கொலுசு அணிவிக்கப்பட்டு கோவில் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டது. அங்கு, யானைக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு, அன்னம் வழங்கப்பட்டது. இன்று, (1ம் தேதி) காலை 7.00 மணிக்கு, விசேஷ சந்தி, அஸ்வ பூஜை, இரண்டாம் கால பூஜை, மாலை 6.00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, தீபாராதனை நடக்கிறது.
முந்திக்கொண்ட மணக்குள விநாயகர்: புதுச்சேரியில் பழமைவாய்ந்த ஐந்து கோவில்களில் திருப்பணி துவக்கப்பட்ட நிலையில், மணக்குள விநாயகர் கோவில் திருப்பணி மட்டுமே, விரைவாக முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகத்திற்கு தேதி குறிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள, பிரசித்திப் பெற்ற வேதபுரீஸ்வரர், வரதராஜப் பெருமாள், மணக்குள விநாயகர் கோவில், வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில், முத்தியால்பேட்டை சீனுவாசப் பெருமாள் கோவில்கள் பழமையும், பெருமையும் வாய்ந்தவை. இக்கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால், கோவில்களை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. வேதபுரீஸ்வரர் கோவிலில், 2012ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதியும், வரதராஜப் பெருமாள் கோவிலில், அதே ஆண்டு நவம்பர் 30ம் தேதியும் பாலாயணம் செய்யப்பட்டது. இரு கோவில்கள் திருப்பணிக்காக, பொதுப்பணித்துறையினர் ரூ.14 கோடியே 28 லட்சத்து 80 ஆயிரத்திற்கு திட்ட மதிப்பீடு தயாரித்தனர். இதற்கு, அறநிலையத்துறையின் ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால், பணிகள் இதுவரை முடியாமல் ஜவ்வு போல இழுத்துக் கொண்டுள்ளது. அதேபோன்று, தருமபால சோழனால் கட்டப்பட்ட, வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் திருப்பணி, ரூ. 11 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில், 2012ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி துவங்கியது. ஆனால், பணிகள் இதுவரை முடியவில்லை. மேலும், முத்தியால்பேட்டை தென்கலை சீனுவாசப் பெருமாள் கோவில் திருப்பணியும், இதுவரை முடியவில்லை.
மணக்குள விநாயகர் கோவிலில் திருப்பணிகளை துவக்குவதற்காக, ௨௦௧௨ம் ஆண்டு ஜூலை ௫ம் தேதி பாலாயணம் செய்யப்பட்டது. ரூ.௬ கோடி செலவில் திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டது. ஒரே ஆண்டில் துவக்கி வைக்கப்பட்ட ஐந்து கோவில்களின் திருப்பணிகளில், நான்கு கோவில் பணிகள் இதுவரை முடியாத நிலையில், மணக்குள விநாயகர் கோவில் திருப்பணி நிறைவடைந்து, வரும் 3ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. மணக்குள விநாயகருக்கு உலக அளவில் உள்ள பக்தர்களின் நன்கொடையால், திருப்பணிகள் துரிதமாக நடந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
கண்ணாடி பள்ளியறை: விநாயகருக்கு இக்கோவிலில் பள்ளியறை உள்ளது. உற்சவர் மண்டபம் அருகே, முழுவதும் கண்ணாடியால் ஆன பள்ளியறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. பளிங்கு கற்களும், கண்ணாடிகளும் பதிக்கப்பெற்ற சுவர்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. அறையின் துாண்கள், ஊஞ்சல் மேடை, சுவாமிக்கு பின்புறம் திருவாட்சி உட்பட அனைத்தும் கண்ணாடியால் செய்யப்பட்டு, பளபளப்பாக காணப்படுகிறது. ரூ. 2 லட்சம் செலவில், சென்னையை சேர்ந்த இன்டோட் என்ற நிறுவனம் இந்த அறையை நேர்த்தியுடன் அமைத்து கொடுத்துள்ளது.கண்ணாடி பள்ளியறை விநாயகருக்கு இக்கோவிலில் பள்ளியறை உள்ளது. உற்சவர் மண்டபம் அருகே, முழுவதும் கண்ணாடியால் ஆன பள்ளியறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. பளிங்கு கற்களும், கண்ணாடிகளும் பதிக்கப்பெற்ற சுவர்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. அறையின் துாண்கள், ஊஞ்சல் மேடை, சுவாமிக்கு பின்புறம் திருவாட்சி உட்பட அனைத்தும் கண்ணாடியால் செய்யப்பட்டு, பளபளப்பாக காணப்படுகிறது. ரூ. 2 லட்சம் செலவில், சென்னையை சேர்ந்த இன்டோட் என்ற நிறுவனம் இந்த அறையை நேர்த்தியுடன் அமைத்து கொடுத்துள்ளது.
தலைவர்கள் தரிசனம்: மணக்குள விநாயகருக்கு உள்நாட்டு பக்தர்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு பக்தர்களும் அதிகம். அத்துடன், புதுச்சேரிக்கு வருகின்ற, முக்கிய தலைவர்களும், மணக்குள விநாயகரை தரிசிக்க தவறுவதில்லை. ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன், பிரதீபா பாட்டீல், தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரும், துணை ஜனாதிபதியாக இருந்த பைரோன்சிங் செகாவத், சங்கர் தயாள் சர்மா, பிரதமர்களாக இருந்த நேரு, இந்திரா, வாஜ்பாய், மன்மோகன்சிங், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், மணக்குள விநாயகர் கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி குடைகள்: மணக்குள விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி, சுவாமிக்கு பிடிப்பதற்காக, ஆறு திருப்பதி குடைகள் வாங்கப்பட்டுள்ளன. விசேஷ காலங்களில் உற்சவ மூர்த்திகள் நகர் வலம் வரும்போது, சுவாமிக்கு குடை பிடிக்கும் வழக்கம், இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், மணக்குள விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில், சுவாமி வீதியுலாவின்போது பிடிப்பதற்காக, ஆறு திருப்பதி குடைகள் வாங்கப்பட்டுள்ளது.ஏழு அடி அகலத்தில் இரண்டு, ஆறு அடி அகலத்தில் இரண்டு, நான்கு அடி அகலத்தில் இரண்டு என குடைகள் வாங்கப்பட்டுள்ளன. இதில், நான்கு குடைகள் மட்டும் பட்டு துணியால் தயார் செய்யப்பட்டுள்ளது. இவை, சென்னையில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.