பதிவு செய்த நாள்
01
ஏப்
2015
12:04
திருவெண்ணெய்நல்லூர்: விழுப்புரம் அருகே உள்ள, கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், வரும் 21ம் தேதி, சித்திரை பெருவிழா துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில், திருநங்கைகளுக்கான, பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. இங்கு, வரும் 21ம் தேதி, சித்திரை பெருவிழா துவங்குகிறது. 22ம் தேதி, பந்தலடியில், ஊர் பிரமுகர்களுக்கு, தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்; 23ம் தேதி முதல், மே 4ம் தேதி வரை, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. முக்கிய திருவிழாவாக, மே 5ம் தேதி இரவு, சுவாமிக்கு திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல மாநிலங்களிலிருந்து வரும் திருநங்கைகள், பூஜாரி கையால் தாலி கட்டிக் கொண்டு, இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். மே 6ம் தேதி காலை 6:30 மணிக்கு, தேரோட்டம் துவங்கி, நத்தம், தொட்டி வழியாக தேர், பந்தலடிக்கு சென்றடையும். அங்கு, பிற்பகல் 12:00 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில், திருநங்கைகள், தாங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து, விதவைக் கோலம் பூண்டு, அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து விட்டு தங்கள் ஊருக்கு திரும்புவர்.