நாகப்பட்டினம்: நாகை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நடந்த சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில் ஏராளமான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர். நாகை அடுத்த நாகூர் ஷாஹூல் ஹமீத் பாதுஷா நாயகம் தர்கா 458 ம் ஆண்டு கந்தூரி விழா, கடந்த 21 ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை தர்காவில் சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு சந்தனக்கூடு ஊர்வலம், நாகை, அபிராமியம்மன் திருவாசலில் இருந்து புறப்பட்டது. சாம்பிராணி சட்டி,நகரா மேடை உட்பட 25 க்கும் மேற்பட்ட மின் அலங்கார ரதங்கள் சந்தனக்கூட்டின் முன்னும் பின்னும் ஊர்வலமாக சென்றது. நேற்று அதிகாலை நாகூரை வந்தடைந்த சந்தனக்கூடு ஊர்வலம்,முக்கிய வீதிகளில் வலம் வந்து காலை 4.30 மணிக்கு தர்கா அலங்கார வாசலை வந்தடைந்தது.தர்கா மானேஜிங் டிரஸ்டி ஷேக் ஹசன் சாகிப் தலைமையில் தர்கா நிர்வாகிகள் வரவேற்றனர். சந்தனக்கூடு ரதத்தில் இருந்து சந்தனம் நிரப்பப்பட்ட குடங்கள் தர்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டது.பின் தர்கா பரம்பரை டிரஸ்டி கலிபா மஸ்தான் சாகிப்,துவா ஓதிய பின், சந்தனம் பூசும் வைபவம் நடந்தது.சந்தனம் பூசும் வைபவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் கலந்து கொண்டனர்.