பதிவு செய்த நாள்
01
ஏப்
2015
12:04
பழநி : பழநி பங்குனி உத்திரவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் (ஏப்.,2) நாளை இரவும், ஏப்.,3ல் தேரோட்டம் நடக்கிறது. கொடுமூடி தீர்த்தக்காவடிக்கு பெயர்பெற்ற பழநி பங்குனி உத்திரவிழா திருஆவினன்குடிகோயிலில் மார்ச் 28ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்.,6வரை நடக்கிறது. விழா நாட்களில், முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன், ஆட்டுகிடா, காமதேனு, யானை, தங்கமயில், போன்ற வாகனங்களில், சன்னதிவீதி, கிரிவீதியில் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருக்கல்யாணம்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை இரவு 7மணிக்குமேல் 8 மணிக்குள் துலா லக்னத்தில் நடக்கிறது. அதன்பின் இரவு 9 மணிக்கு வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. நாளைமறுநாள் (ஏப்.,3ல்) பங்குனி உத்திரத்தன்று மாலை 4.35 மணிக்குமேல் திருத்தேரோட்டம் நடக்கிறது. பக்தர்களுக்கு வசதிக்காக கிரிவீதியில் காவல் உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கோயில், பாதவிநாயகர் கோயில் அருகே குடிநீர், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்யப்படுகிறது. பங்குனிஉத்திரம் ஏப்.3ல் இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.