பதிவு செய்த நாள்
01
ஏப்
2015
05:04
கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு, 4 ஆயிரம் பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி ‘சேத்தாண்டி’ வேடமணிந்து நேர்த்திகடன் செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பங்குனி பொங்கல் விழா விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த மார்ச் 24 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவை முன்னிட்டு, கும்பம் எடுத்தல், அலங்கரிக்கப்பட்ட பூதம், காமதேனு, ரிஷபம், குதிரை, மயில்,யானை, சிம்மம் வாகனங்களில் முத்துமாரியம்மன் நகர் வலம் வந்து, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பொங்கல் வைத்தும், பூக்குழி இறங்கியும், அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை எடுத்து வந்தும், கரும்பாலை தொட்டி, பால்குடம் சுமந்து வந்தும் நேர்த்தி கடன்களை செலுத்தினர். உடலில் அம்மை உட்பட தோல் நோய்கள் வராமல் இருக்கவும், வியாதிகளால் பாதிக்கப்பட்டோர் மீண்டும் நோய் தாக்காமல் இருக்கவும், உடல் முழுவதும் சேறு பூசி, ‘சேத்தாண்டி’ வேடமணிந்து, 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், கைகளில் வேப்பிலை ஏந்தியபடி,அதிகாலை முதல் ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன்களை செலுத்தினர். இதுகுறித்து கமுதி சுரேஷ் கூறுகையில், “அம்மை, தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் இந்நோய் தாக்காமல் இருக்கவும், உடல் ஆரோக்கியம் வேண்டியும் அம்மனுக்கு, ‘சேத்தாண்டி’ வேடமணிந்து நேர்த்தி கடன்களை செலுத்தி வருகிறார்கள். இந்நிகழ்ச்சிக்காக, கமுதியில் பிறந்து வெளியூர், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் கூட கட்டாயம் வந்து பங்கு பெறுவது, இக்கோயிலின் சிறப்பு,”என்றார்.