பதிவு செய்த நாள்
29
ஜூன்
2011
11:06
மாமண்டூர் குகைக் கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை மீட்டு, சுற்றுலாத் தலமாக மாற்றும் பணியில், இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது மாமண்டூர் பெரிய ஏரி. இம்மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரி. 4,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நீரை கொண்டு, 18 கிராம விவசாயிகள் பயனடைகின்றனர். இதன் கரை, இயற்கை எழில் கொஞ்சும் வகையில், மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலையில் உள்ள கற்களை குடைந்து, குகைக் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 500 வருடங்களுக்கு முன், இந்த கோவில் செதுக்கப்பட்டு இருக்கலாம் என வரலாறு கூறுகிறது. பெரிய தூண்களுடன், சுவாமி சிலைகள் வைப்பதற்கான அறைகளும் அமைந்துள்ளன. இங்கு, என்ன சிலைகள் வைக்கப்பட்டிருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. நவாப்புகள் ஆட்சி புரிந்த காலத்தில், இங்குள்ள சிலைகள், அவர்கள் மூலம் உடைக்கப் பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்திய தொல்லியல் துறை மூலம், 1958ம் ஆண்டு முதல், குகைக் கோவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மலையடிவாரத்தில், கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, இந்திய தொல்லியல் துறையினர் மீட்டு, கம்பி வேலிகள் அமைத்துள்ளனர். கோவிலுக்கு நுழைவு வாயிலும், சுற்றுலாப் பயணிகளுக்காக தங்கும் அறை, கழிப்பறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் இக்கோவிலுக்கு வரத்துவங்கியுள்ளனர். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், நரசமங்கலம் கிராமத்தையொட்டி, கோவிலுக்கு செல்லும் வழிக்காட்டி பலகையும் வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, "மாமண்டூர் குகைக் கோவிலை அழகுப்படுத்தி வருகிறோம். கோவிலுக்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர மண் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த பணி முடிந்ததும், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.