நரகாசுரன் மோக்ஷத்தை அடைந்த திதியை நரகசதுர்த்தசி என்றே பெரியோர் கூறுவது வழக்கம். அன்று ஏழைகளுக்கெல்லாம் எண்ணெய், வஸ்திரம் முதலியவற்றை அளித்து நலம் அடையலாம் என்றும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குருவாயூரப்பன் சன்னதியில் தான் இயற்றிய நாராயணீயத்தில் நாராயண பட்டதிரியும், குருவாயூரப்பா! நரகாசுரனின் காவலாளியான ஐந்து தலையுள்ள முரன் என்ற அசுரன் ஜலம் நிறைந்த ஆழமான அகழியிலிருந்து கிளம்பி வந்தவுடன் தாங்கள் சக்ராயுதத்தால் அவனை வதம் செய்தீர்கள். நான்கு தந்தங்களைக் கொண்ட பல யானைகளுடன் போருக்கு வந்த நரகாசுரனையும் சக்ராயுதத்தால் தாங்கள் வதம் செய்து அவனுக்கு நரகயாதனை இல்லாமல் செய்ததுடன், இக்கதையைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் கூட நரகயாதனை இல்லாமல் செய்தீர்களாமே? எனக் கேட்டார். குருவாயூரப்பனும் ஆம்! என அங்கீகரித்துத் தலையை அசைத்தாராம்.