பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
04:04
சித்திரை முதல் நாளை தென்னிந்திய மக்கள் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். இதையே வட நாட்டில் பைசாகி என்றும் கேரளத்தில் விஷு என்றும் கொண்டாடுகிறார்கள். ருதுக்களுக்குள் வசந்த ருதுவாக இருக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில் அருளியிருக்கிறார். இம்மாதத்தில் வசந்தகாலம் தொடங்குகிறது. புத்தாண்டு என்றவுடன் நம் மனதில் உற்சாகம் தானாகவே கூடி கொள்ளும். நல்ல நேரத்துக்காக நாம் காத்திருக்கிறோம். காரணம் நல்லது செய்யாததை நாள் செய்யும் என்ற நம்பிக்கைதான்.
இந்த தமிழ் வருடங்கள் எதை அடிப்படையாக வைத்து அமைந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? முதன்முதலில் எகிப்து நாட்டில் தான் நாளை மணிகளாகப் பிரிக்கும் வழக்கம் தோன்றியது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாளை பகல் பொழுது பத்து மணி, சந்திப் பொழுது இரண்டு மணி, இரவு பன்னிரண்டு மணி நேரம் என்று பிரித்தனர். ஒரு மணிக்கு அறுபது நிமிடம். ஒரு நிமிடத்திற்கு அறுபது விநாடிகள் என்றும் வகுக்கப்பட்டது. இந்த அறுபது என்ற எண் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வருடங்கள் அறுபது. நாழிகைகள் அறுபது. நிமிடங்களும் நொடிகளும் அறுபது. இந்த அறுபது என்ற கணக்கு எப்படி வந்தது என்பதை முந்தைய வேதப் புத்தகமான தைத் திர சம்ஹிதா என்று நுõல் கூறுகிறது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வருடத்தை சூரிய வருடம், சந்திர வருடம் என்று இரு பெயர்களால் அழைத்தனர். சூரிய வருடமென்பது பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக் கொண்ட நேரத்தையும், சந்திரவருடம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கும். சூரிய வருடத்திற்கும் சந்திர வருடத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் 11 நாட்கள். சந்திர மாதம் 27 நாட்கள். சந்திர மாதம் 27 நாட்களையே நாம் 27 நட்சத்திரங்களாகக் கூறுகிறோம். ஹஸ்தினாபுர அதிபதியான துரியோதனனின் அழைப்பை ஏற்று தருமர் சூதாடச் சென்றதும் அவரை சகுனி பகடைகளை உருட்டி தோல்வியடையச் செய்ததும் அதன் காரணமாக பஞ்ச பாண்டவர்களைப் பதின்மூன்று வருடங்கள் வலம் போகச் சொன்னதும் எல்லோரும் அறிந்ததே.
சூரிய வருடத்தை மனதில் கொண்டு தான் துரியோதனன் பாண்டவர்களுக்கு வனவாச விதியை நிர்ணயித்தான். ஆனால் தர்மரோ அதைச் சந்திர வருடம் என்ற கணக்கில் எடுத்துக் கொண்டார். அதனால் வனவாசம் முடிவதற்கு 143 நாட்கள் (11*13) முன்னதாகவே பாண்டவர்கள் வெளிப்பட்டனர். இதனால் மூண்டதுதான் பாரதப்போர். கிரகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றது குரு. இந்தக் கிரகம் சூரியனை சுற்றிவர எடுத்துக்கொண்ட நேரத்தின் அடிப்படையில் தான் வருடக் கணக்கீடு முறை துவங்கப்பட்டது. குருவாகிய பிரகஸ்பதி சூரியனை ஐந்து முறை சுற்றி வருவதால் ஒரு பிரகஸ்பதி சக்கரம் உண்டாகிறது. ஒரு முறை சுற்ற பன்னிரண்டு வருடங்கள், இவ்வாறு ஐந்து முறை சுற்றி ஒரு பிரகஸ்பதி சக்கரத்தை உருவாக்க அறுபது வருடங்கள் ஆகின்றன. சித்திரை முதல் பங்குனி வரை உள்ளவை இந்த பிரகஸ்பதி சக்கர நாட்களின் பெயர்கள். அவை மேஷம் முதல் மீனம் வரை உள்ள பன்னிரெண்டு ராசிகளாக வழங்கப்படுகின்றன.
பிரபவ, விபவ, சுக்ல, பிரமோத என்ற வருடங்கள் பிரஹஸ்பதி சக்கரத்தில் அறுபது மாதங்களாகும். இந்த வருடம் நந்தன வருடம் எண்ணிக்கையில் இது இருபத்தியாறாவது வருடம். ஒரு புள்ளியை ஏதாவது ஒரு இடத்தில் வைத்து அது ஆரம்பம் என்றால் அந்தப் புள்ளியில்தான் முடிவும் வருவது போன்றதுதான் பிரகஸ்பதி சக்கரமும். அட்சய என்ற வருடத்துடன் பிரபவ என்ற அடுத்த சுற்றும் அங்கேயே ஆரம்பித்து விடுகிறது. சமஸ்கிருதப் பெயருடன் அழைக்கப்படும் இந்த ஒவ்வொரு வருடத்திலும் வசந்தம், வெயில், மழை, இலையுதிர், குளிர், பனி என ஆறு பருவங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் இரண்டு பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவை-வசந்தம்-மது, மாதவ
வெயில்-சுக்கிர, சுசி
மழை-நப, நபஸ்ய
இலையுதிர்-ஈசா, ஊர்ஜா
குளிர்-சகஸ், சகஸ்யா
பனிக்காலம்-தபஸ், தபஸ்யா
ஒவ்வொரு மாதத்திலும் கிருஷ்ணபட்சம், சுக்ல பட்சம் என்ற இரு பகுதிகள் வருகின்றன. இந்த ஒவ்வொரு பட்சமும் இரண்டு வாரங்களாகப் பிரிக்கப்பட்டன. இவை தவிர, சாலி வாகன சகம், விக்கிரம சகம் என்ற பல சகாப்தங்களின் பெயர்களையும் காண்கிறோம். குப்தர்கள் காலத்தில் சாகர்கள் என்ற இனத்தினர் பாரதத்தின் மேல் படையெடுத்தனர். அவர்களை வென்றவர்களை, விக்கிரமாதித்தன் என்றழைத்தனர், ஒவ்வொரு முறை சாகர்களை வெல்லும் போதும் அந்த மன்னர்கள் தங்கள் பெயர் கொண்ட ஒரு சகாப்தத்தை துவங்கினர். அந்தப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டதுதான் சாலி வாகன சகாப்தம். பிரபாதி என்பது இப்போது வழக்கில் உள்ள அறுபது வருடங்கள் ஆகும்.