பதிவு செய்த நாள்
17
ஏப்
2015
11:04
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக பணிகள் விறு,விறுப்பாக நடந்து வருகின்றன. வரும் ஆவணி மாதம், கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வரலாற்று சிறப்பு மிக்க பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. கடந்த, 2002ம் ஆண்டு இக்கோவில் புனரமைக்கப்பட்டு, புதிய ராஜகோபுரம், தாயார் சன்னதி, கோபுரங்கள், தும்பிக்கை ஆழ்வார், ராமானுஜர் சன்னதி கோபுரங்கள், சொர்க்கவாசல், இதர கோபுரங்கள், திருமதில்சுவர், அன்னதானம் மண்டபம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆண்டு புதியதாக செய்யப்பட்ட தேரில் சித்ரா பவுர்ணமி தேர்திருவிழா கொண்டாடப்பட்டது.தற்போது இந்தாண்டு, கோபுரங்களுக்கு தங்கமுலாம் பூசி, வண்ணம் தீட்டி, மராமத்து பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் கூறுகையில்,“கோவில் வளாகத்தின் கூரைகள் பழுது பார்க்கப்பட்டு, மேல்புறம் முழுவதும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன. காளிதாஸ் சுவாமிகள், ராமானுஜர் கோவில் உட்பிரகாரம் முழுவதும் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி முடிந்து விட்டது. சொர்க்கவாசல் பாதை புனரமைக்கப்பட்டுள்ளது. புதிய கொடிமரம் நிர்மாணம் செய்யப்படும். கோவில் வளாகத்தில், தசாவதார சிலைகள் அமைக்க பணிகள் விரைவில் துவக்கப்படும். பணிகளை முடித்து வரும் ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.