பதிவு செய்த நாள்
20
ஏப்
2015
10:04
தஞ்சாவூர்: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில், நூறு ஆண்டுகளுக்கு பின், இன்று தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் பாரம்பரிய சின்னமாகவும், சோழர் கால கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்கி வருகிறது. இங்கு, 19ம் நூற்றாண்டு பின், பல்வேறு காரணங்களால் தேரோட்டம் தடைப்பட்டது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து, 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகத் திருத்தேர் செய்யப்படும் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, கடந்த, 2013ம் ஆண்டு செப்டம்பரில், தஞ்சாவூர் மேல வீதி, கொங்கணேஸ்வரர் கோவில் வளாகத்தில், தேர் செய்வதற்கான பூர்வாங்க பணி துவங்கியது. தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலுக்கு எதிர்புறம், தேர் கட்டுமானப் பணி நடந்தது. தேர் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், இன்று காலை, 6.30 மணிக்கு தேர் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.