திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தோமையார் பேராலயத்தில் துடைப்பம் நேர்த்திக்கடனாக செலுத்தும் வினோத திருவிழா நடந்தது. திண்டுக்கல், தோமையார் புரத்தில் தோமையார் பேராலயம் 125 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு ஆண்டு தோறும் கிறிஸ்துவர்கள் உட்பட பல தரப்பு மக்களும் துடைப்பம், மிளகு,உப்பு, மெழுகுவர்த்தி நேர்த்திக்கடனாக செலுத்தி பிரார்த்தனையில் ஈடுபடுவர். துடைப்பத்தை தோமையாருக்கு படைக்க மக்கள் நேர்ந்து கொள்வது வழக்கம். இதனால், மரு நீங்கும். குடும்ப பிரச்னைகள் தீரும். நோய்கள் வராது உள்ளிட்ட பல்வேறு நம்பிக்கைகள் மக்களிடம் உள்ளது.
பேராலயத்தில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தோமையார் பாதங்களில் உப்பு, நிலக்கடலை, கற்கண்டு வைத்து வழிப்பட்டனர். நேற்று காலை முதல் இரவு 9 மணிவரை நேர்த்திக்கடனாக 10 ஆயிரம் துடைப்பங்கள் பெறப்பட்டன.நேர்த்திகடன் செலுத்திய ஜி.அமிர்தா கூறியதாவது: எனக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது. எங்கள் குடும்பத்தினர் நீண்ட நாட்களாக துடைப்பத்தை நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர். முகத்தில் மரு நீங்கி, விரைவில் முகம்பொலிவடையும். இந்த நம்பிக்கை கிறிஸ்துவர்கள் உட்பட பல தரப்பு மக்களிடம் நீண்ட நாட்களாக உள்ளது, என்றார்.