பதிவு செய்த நாள்
20
ஏப்
2015
11:04
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில், ஆண், பெண் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக, மூன்று தொட்டிகள் அமைக்கும் பணி, முடியும் தறுவாயில் உள்ளது. திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பர். இங்குள்ள ஹிருதாபநாசினி என்றழைக்கப்படும் கோவில் குளத்தில், பக்தர்கள் குளிப்பது வழக்கம். ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தில், முழுவதும் தண்ணீர் நிரப்பும் வகையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணி, ஓராண்டாக நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக, கோவில் குளத்தில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக, குளத்தின் ஒருபகுதியில் மூன்று பிரம்மாண்டமான தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன.ஒரு தொட்டியில் ஆண், மற்றொன்றில் பெண், மூன்றாவது தொட்டியில், ஆண், பெண் என, இருபாலர் குளிக்கும் வகையில், கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில், பக்தர்கள் குறிப்பாக வயதானவர்களும், பெண்களும் குளிக்க சிரமப்படுவதால், பாதுகாப்பாக குளிக்கும் வகையில், மூன்று தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன என்றார்.மேலும், மூன்று தொட்டிகளை இணைக்கும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள், இம்மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்றார்.