தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில் அசுத்தம்: பக்தர்கள் வேதனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2015 12:04
தேவிபட்டினர் : தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷாண கடற்கரை அசுத்தமாக காணப்படுவதால், பக்தர்கள் புனித நீராட முடியாமல் வேதனையுடன் திரும்பிச் செல்கின்றனர். ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப் பட்ட நவக்கிரக கோயில் தேவி பட்டினத்தில் கடலுக்குள் அமைந் துள்ளது. ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகள் இக்கோயிலுக்கும் வந்து பூஜை செய்து, வழிபட்டு செல்கின்றனர். இது தவிர, புத்திர தோஷம், நாகதோஷம், செவ்வாய் தோஷம் உள்ளிட்ட ஜாதக ரீதியான பிரச்னைகளுக்கும் இங்கு பக்தர்கள் பரிகார பூஜை செய்கின்றனர். தற்போது, கோடை விடுமுறையை யொட்டி பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நவக்கிரகங்களை வழிபடுபவர்கள் நேர்த்திகடனாக தங்களது ஆடைகளை கடலுக்குள் விட்டு விடுகின்றனர். அவற்றை அப்புறப் படுத்தாததால், கடலுக்குள் புனிர நீராட செல்லும் பக்தர்கள் காலில் துணிகள் சிக்குகின்றன. இதனால், பல பக்தர்கள் நவபாஷாண கடலுக்குள் இறங்க முடியாமல் வேதனைப்படுகின்றனர். பலர் கரையில் இருந்தபடியே தங்களது பரிகாரபூஜைகளை முடித்துவிட்டு, தண்ணீரை தலையில் தெளித்து செல்கின்றனர்.
நவபாஷாண கடலுக்கு செல்லும் நடைபாதையில் பதிக்கப்பட்ட "டைல்ஸ்கள் பெயர்ந்து, அவ்வப்போது பக்தர்களின் பாதங்களை பதம்பார்த்து வருகிறது. சாக்கடை கழிவுகளும் கோயில் அருகே குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால் தேவிப் பட்டினம் வரும் பக்தர்கள், வேதனையுடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.