பதிவு செய்த நாள்
24
ஏப்
2015
11:04
ஸ்ரீபெரும்புதுார்: ஆதிகேசவ பெருமாள், பாஷ்யகார சுவாமி கோவிலில், நேற்று ராமானுஜர் அவதார உற்சவத்தை ஒட்டி, தேரோட்டம் நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், ராமானுஜர் அவதார உற்சவம், கடந்த 14ம் தேதி துவங்கியது. தினமும் ராமானுஜர் காலை, மாலை நேரங்களில், பல வகை வாகனங்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று நடந்தது. இதற்காக, அதிகாலை 5:30 மணிக்கு, உற்சவர் ராமானுஜர் தேரில் எழுந்தருளினார். பின், ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், காலை 7:30 மணிக்கு, பக்தர்களால் தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர், மதியம் 1:15 மணிக்கு நிலைக்கு வந்தது. இதன்பின், இரவு மலர் அலங்காரத்தில் உற்சவர் ராமானுஜர் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, காலை ராமானுஜர் தங்கப்பல்லக்கிலும், மாலை புஷ்ப பல்லாக்கிலும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை காலை கந்தபொடி வசந்தத்துடன் விழா நிறைவு பெறும்.
- நமது நிருபர் -