மதுரை மீனாட்சி அம்மன் ஆட்சி துவக்கம்: நாளை பட்டாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2015 11:04
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான நாளை(ஏப்.28) இரவு 7.36 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை காலை அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் மேலமாசிவீதி கட்டுச்செட்டி மண்டபத்தில் எழுந்தருளுவர். அபிஷேகத்திற்கு பின், அம்மனுக்கு பரிவட்டம் மட்டும் சாத்தப்பட்டு, மாலை 3 மணிக்கு கோயிலுக்கு புறப்பாடு நடக்கும்.மாலை 6 மணி முதல் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில், திருமலை நாயக்கர் வழங்கிய ரத்ன கிரீடத்திற்கு அபிஷேகம் நடக்கும். இரவு 7.36 மணிக்கு அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்படும். பின் அம்மனுக்கு பரிவட்டமும், வெற்றிக்கு அறிகுறியாக வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்படும். இதைதொடர்ந்து அம்மனின் அரச பிரதிநிதியாக கருதப்படும் தக்கார் கருமுத்து கண்ணன், அம்மனிடமிருந்து செங்கோல் பெற்று, சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் வழங்குவார். இரவு 8 மணிக்கு மேல் அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் உலா வருவார். நாளை துவங்கும் அம்மன் அரசாட்சி ஆவணி மாதம் வரை நடக்கும்.