காத்மாண்டு: நிலநடுக்கத்தின் விளைவாக, நேபாளத் தலைநகர் காத்மாண்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள புராதன இந்து கோயில்கள் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளதாக வரலாற்று அறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள புகழ்பெற்ற இந்து கோயிலான காஸ்தாமண்டபம் கடுமையாக சேதமடைந்துள்ளது. கடந்த 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மூன்றடுக்கு கோயிலை அடிப்படையாகக் கொண்டுதான் "காத்மாண்டு என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.இங்குள்ள பஞ்ச்தலே கோயில், தசாவதாரக் கோயில், கிருஷ்ணர் கோயில் ஆகியவையும் இடிந்துள்ளன. 9 அடுக்கு கட்டடமான வசந்தபூர் தர்பாரில் உள்ள அனுமான் கோயில் உள்ளிட்டவையும் மோசமாக சேதமடைந்துள்ளன. பட்டான், பக்தாபூர் ஆகிய இடங்களில் உள்ள பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களும், கோயில்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.