பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
12:04
அழகர்கோவில் : அழகர்கோவிலில் நடக்கும் சித்திரை மற்றும் ஆடித் திருவிழாவின் போது புறப்படும் பெருமாள் சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், ஆராதனைகள் நடக்கும். சிவகங்கை சமஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இம்மண்டபத்தின் ஒருபகுதி பல ஆண்டுகளுக்கு முன் இடிந்தது. மீதமுள்ள மண்டபமும் சிதைந்து பக்தர்கள் தலையில் விழும் நிலையில் இருந்தது.
சுவாமிக்கும், ஆபரணங்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதால் சில ஆண்டுகளாக அருகில் கொட்டகை அமைத்து அங்கு சுவாமியை எழுந்தருள செய்தனர். சமஸ்தான நிர்வாகம் கேட்டு கொண்டதை தொடர்ந்து, மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. இதன் புனருத்தாரணம், சமஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் நடந்தது. காலையில் ஹோமம் வளர்க்கப்பட்டு, ஆராதனைகள் முடிந்து மண்டபத்தில் புனித நீர் ஊற்றினர். கோயில் நிர்வாக அதிகாரி வரதராசன், சமஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர்கள் பாலசரவணன், சாம்பசிவன் ஆகியோர் கலந்து கொண்டனர். சுந்தரநாராயண பட்டர் புனருத்தாரணம் செய்து வைத்தார். இந்த மண்டபத்திற்கான உபய திருப்பணியை சமஸ்தானம் உத்தரவின் பேரில் மதுரை வில்லாபுரம் சீனிவாசன், சுமதி ஆகியோர் செய்திருந்தனர்.