பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
10:04
தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவிலில், 100 ஆண்டுகளுக்கு பின், நாளை தேரோட்டம் நடைபெற இருக்கிறது. தமிழகத்தின் சிறப்புமிகு அடையாளங்களில், ராஜராஜ சோழனின் பெரிய கோவிலும் ஒன்று. இதன் பிரம்மாண்டம், தமிழர்கள் அனைவரையும் தலை நிமிர செய்யும்!
கோவிலின் கம்பீரம் : தமிழகத்தில் சோழர்களின் ஆளுமை உச்சத்தில் இருந்த காலத்தில், மாமன்னர் ராஜராஜ சோழனால், கி.பி.985- - 1014ல், தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டது. 1,000 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதற்குள், பெரும் மழை, புயல், பிற மன்னர்களின் ஆட்சி, நிலத்தின் தன்மை என, எண்ணற்ற மாற்றங்களை இவ்வுலகம் சந்தித்திருக்கும் போதும், தஞ்சை பெரிய கோவிலின் கம்பீரம், சற்றும் குறையவில்லை!
பெருமைமிகு சாட்சி : தமிழர்களின் கட்டட கலைக்கு, இக்கோவிலே பெருமைமிகு சாட்சி! யுனெஸ்கோவால், உலக பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ள, இக்கோவிலின் சிறப்புகளை எடுத்துரைக்க, இப்பக்கம் போதாது.சோழர்கள் காலத்தில் தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு, திருவிழாக்கள் நடத்தப்பட்டாலும், சித்திரை பிரம்மோற்சவம் திருவிழா, நாயக்கர் மற்றும் மராட்டியர் ஆட்சி காலத்தில் தான் நடத்தப்பட்டது. இதில், 15ம் நாள் உற்சவமாக தேரோட்டம் நடந்தது.இரண்டாம் சரபோஜி மன்னர், ஐந்து பெரிய தேர்களையும், நான்கு ராஜ வீதிகளில் தேர் முட்டிகளையும் அமைத்துள்ளார். தேரோட்டம் நடந்தது என்பதற்கான முக்கிய சாட்சியாக இருப்பது, அந்த தேர் முட்டிகளே!அவர்களின் காலத்திற்கு பின், தேரோட்டம் நடக்கவில்லை. பழமையை மீட்டெடுக்கும் விதமாக, சித்திரை பிரம்மோற்சவ விழாவில், தேரோட்டம் நடக்க வேண்டும் என, தஞ்சை மக்களும், சமூக ஆர்வலர்களும், தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.அதையேற்று தமிழக அரசு, 2013ல், புதிய தேர் செய்ய, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. தஞ்சை மேலவீதி கொங்கணேஸ்வரர் கோவில் வளாகத்தில், புதிய தேர் உருவாக்கும் பணியில், ஸ்தபதி அரும்பாவூர் வரதராஜன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள் ஈடுபட்டனர்.
360 சிற்பங்கள்: இந்த தேரானது, தரைமட்டத்தில் இருந்து சிம்மாசனம் மட்டம் வரை, 16.5 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தேரின் நான்கு திசைகளிலும், குதிரை மற்றும் யாளி உருவங்கள் உட்பட, 360 சிற்பங்களை கொண்டுஉள்ளது. தேர் சக்கரங்கள், தலா, 6.5 அடி உயரத்திலும், அச்சு, 14.5 அடி நீளத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. தேர் செய்ய, இலுப்பை மரம், தேக்கு மற்றும் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேரின் மொத்த எடை, 40 டன்.தேரின் முன்பக்கம், 5.5 அடியில், கைலாசநாதர் கைலாய காட்சி சிற்பம், பின்புறம், அதே அளவில், நந்தி மண்டபத்துடன் கூடிய, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சிற்பம் இடம் பெற்றுள்ளது.தேர் வெள்ளோட்டம், கடந்த 20ம் தேதி, சிறப்பாக நடைபெற்றது. நாளை நடைபெறும் தேரோட்டத்துக்கு பின், தேரை நிலைநிறுத்த, கொடிமரத்து மூலை பகுதியில் இருந்த, தேர்முட்டியும் புனரமைக்கப்பட்டுள்ளது.
ராஜவீதிகளில் : நாளை காலை, 5:30 மணிக்கு, பிரகதீஸ்வரர் கோவிலிலிருந்து விநாயகர், சுப்ரமணியர், தியாகராஜர் உடன் அம்மன், தனி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தேர் மண்டபத்தை அடைகின்றனர். தொடர்ந்து, சுவாமி அம்பாளுடன் தேருக்கு எழுந்தருள்வர். மங்கள வாத்தியம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன், காலை, 6:00 மணி முதல், 6:45 மணிக்குள் புதிய தேர் வடம் பிடிக்கப்படும்.தேர் பவனி, நான்கு ராஜவீதிகளில் நடக்கும். பக்தர்கள் வழிபாட்டுக்காக, மேல ராஜவீதியில் கொங்கணேஸ்வரர் கோவில், மூலை ஆஞ்சநேயர் கோவில், வடக்கு ராஜவீதியில் ராணி வாய்க்கால் சந்து எதிரில் உள்ள பிள்ளையார்கோவில், காந்தி சிலை அருகில் உள்ள ரத்தினபுரீஸ்வரர் கோவிலில் தேர் நின்று செல்லும்.தொடர்ந்து, கீழ ராஜவீதியில் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள கொடிமரத்து மூலை, அரண்மனை எதிரில் உள்ள விட்டோபா கோவில், தமிழ் பல்கலைக்கழக அலுவலகம் அருகில் உள்ள மணிகர்ணிகேஸ்வரர் கோவில், நிக்கல் கூட்டுறவு வங்கி அருகில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், தெற்கு ராஜவீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், இந்தியன் வங்கி அருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், தங்கசாரதா அருகில் உள்ள காளியம்மன் கோவில் ஆகிய இடங்களில் தேர் நிறுத்தப்படும்.இத்தகவல்களை, தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ரமணி தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகள் : ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்த கோவிலையும், 100 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தேரோட்டத்தையும் கண்டுகளிக்க, தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர்.
ஒற்றுமையின் வலிமையை எடுத்துக்கூறும் திருவிழா: தேர் திருவிழா, ஒற்றுமையின் வலிமைகளை எடுத்துக் கூறும் திருவிழா இது. ஊர் கூடி தேரிழுத்தல் எனக் கூறுவர். எந்த நல்ல காரியம் நடைபெறுவதற்கும், அனைவரின் ஒத்துழைப்பு வேண்டும். அதுபோல, மிக வலிமையான தேரை இழுக்க, அனைத்து மக்களின் சக்தியும் ஒன்று கூடினால், தேர் நிலைக்கு வந்துவிடும்.தேரைப் பற்றி, சங்க இலக்கியங்களிலும், வேதங்களிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. தேர் செய்யும் முறை குறித்து, மயமதம் - மானசாரம் போன்ற சிற்ப நூல்கள் கூறுகின்றன. தேரில் பல வகை உள்ளன என்று, குமார தந்திரம் என்னும் ஆகமநூல் குறிக்கிறது.தமிழகம் உட்பட, பல மாநிலங்களிலும் கோவில்கள் சில, தேர் வடிவத்தில் உள்ளதையும் நாம் காணலாம். கடலூர் மாவட்டம், மேலகடம்பூர் அமிர்தகடேசுவரர் கோவில் கருவறை, தேர் போன்றே அமைந்திருக்கும். தாராசுரம், சிதம்பரம், ஸ்ரீரங்கம், திருப்புலிவனம் போன்ற பல கோவில்களில், தேர் வடிவ மண்டபங்களைக் காணலாம். குதிரை, யானை ஆகியவை, தேர் வடிவிலான கோவிலை இழுத்துச் செல்வது போல, சக்கரங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும்.மனுநீதி சோழன் வரலாற்றை, சிற்ப வடிவில், திருவாரூர் மற்றும் சென்னைக்கு அருகில் மப்பேடு, செய்யூர் போன்ற கோவில்களில் காணலாம்.தஞ்சை பெரிய கோவில் ஆண்டுப் பெருவிழா, 13 நாட்கள்; சதயத் திருவிழா, 12 நாட்கள்; கார்த்திகை திருவிழா, ஒரு நாள்; சங்கராந்தி நாள், 12 நாட்கள் ஆக, 34 நாட்கள் திருவிழா நடைபெற்றதை, கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. ஆனால், தேர்த் திருவிழா நடைபெற்றதற்கான குறிப்புகள் காணப்படவில்லை.சரஸ்வதி மகாலில் உள்ள, மராட்டியர் கால மோடி ஆவணங்களில், தஞ்சை பெருவுடையார் கோவிலிலும், தஞ்சை பகுதியில் நடைபெற்ற தேர்த் திருவிழாக்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.தஞ்சை பெருவுடையார் கோவிலில், சித்திரைப் பெருவிழாவின் போது, 1801ல், தேர்த் திருவிழா நடத்த, 30,150 சக்கரம் தொகை அளித்ததாக, ஓர் ஆவணம் கூறுகிறது. சக்கரம் என்பது, மராட்டியர் காலத்தில் வழக்கில் இருந்த நாணயம். 1811ல், தேர் சக்கரங்களை புதுப்பிக்க, 500 சக்கரம் அளிக்கப்பட்டது.
தஞ்சை பெரிய கோவில் தேரை இழுக்க, 1776ல், 20,200 ஆட்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். கடந்த, 1818ல், திருவையாறு பகுதியில் இருந்து, 1,900 பேர்; பாபநாசத்தில் இருந்து, 2,800 பேர்; கும்பகோணத்தில் இருந்து, 3,494 பேர்; மாயவரத்தில் இருந்து, 3,480 பேர்; திருவாரூரில் இருந்து, 2,920 பேர்; மன்னார்குடியிலிருந்து, 4,200 பேர்; கீவளூரிலிருந்து, 4,500 பேர்; நன்னிலத்தில் இருந்து, 3,200 பேர்; வாகனங்கள் தூக்க, தனியாக, திருவையாறில் இருந்து 900 பேர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அன்று, தஞ்சை பெரிய கோவில் தேரை இழுக்க, 27,394 நபர்களின் உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது.அப்போதைய காலகட்டத்தில், திருவலஞ்சுழி, திருவையாறு, திருவாரூர், திருவிடைமருதூர் கோவில்களுக்கும், தேர் இழுக்க, நபர்கள் அனுப்பப்பட்டதாக மோடி ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.தஞ்சை பெரிய கோவிலில், மிக பெரிய அளவில் தேர் இயங்கி இருக்கிறது. தேர் வலம் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்த, தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை என்றாலும், நிச்சயமாக, போற்றுதலுக்கு ஆட்கள் இல்லை என்ற காரணம், முக்கியமானதாக இருந்திருக்கும்.மேலும், தேரை இழுப்பதற்கு, மிக அதிக மனித ஆற்றல் தேவைப்பட்டிருக்கிறது. பின்னாளில், போதிய மனித ஆற்றல் கிடைக்காமல் இருந்திருக்கலாம். திருக்கோவில்களில் நடைபெறும் தேரோட்டம், நாட்டில் அமைதியையும், செழிப்பையும் உண்டாக்கும் என, ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.
கி.ஸ்ரீதரன். தொல்லியல் துணை கண்காணிப்பாளர் (பணி நிறைவு)