பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
11:04
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தச்சூர் கிராமத்தில், பழங்கால பல்லவர் கால சிற்பங்கள், கோவில் கட்டுமானம் என்ற பெயரில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சிதைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதுகுறித்து தொல்லியல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விழுப்புரம் மாவட்டம், தச்சூர் கிராமத்தில், 1998 ம் ஆண்டு, கள்ளக்குறிச்சியை சேர்ந்த உழவாரப் பணி குழுவின் சுத்தப்படுத்தும் பணியின் போது, பூமிக்கடியில் இருந்து ஒரு லிங்கம் கண்டெடுக்கப் பட்டது. தொடர்ந்து தோண்டிய போது, பல்லவர் காலத்தை சேர்ந்த ஜேஷ்டா தேவி, லிங்கங்கள், கல்வெட்டு, சோமாஸ்கந்தர், கொற்றவை உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப் பட்டன. அவை கண்டெடுக்கப்பட்ட நிலத்திலேயே ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு, அந்த சிற்பங்கள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இதுகுறித்து அறிந்த வரலாற்று ஆர்வலர்கள் பலர், தச்சூர் கிராமத்திற்கு சென்று, அவை குறித்த விழிப்புணர்வை, கிராமத்தினருக்கு ஏற்படுத்தினர். அந்த கிராமத்தில், பல்லவர் காலத்தில், ஒரு கோவில் இருந்து அது அழிந்து, பின் எஞ்சிய சிற்பங்களே அவை என, சிற்பங்களின் காலப் பெருமையை தெரிவித்தனர். அதன் பின், தொல்லியல் துறையினர், அப்போதைய மாவட்ட கலெக்டர் ஆகியோர், சிலைகளை பார்வையிட்டு சென்றனர். அவற்றை, அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என, கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2012ம் ஆண்டு முதல், சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் அருகே, கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த கோவில் கட்டுமானத்திற்கான பொருட்களை வைப்பதற்காக, பல்லவ கால சிற்பங்கள் இருந்த கூடாரம் சிதைக்கப்பட்டு, சிலைகள், தாறுமாறாக வீசப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு லிங்கம், உடைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், கடந்த ஆறு மாதங்களாக நடந்திருக்கலாம் என, கிராமத்தினர் கூறியுள்ளனர். இதுகுறித்த தகவல்கள், நேற்று முகநூலில், படங்களுடன் வெளியாகின. பல்லவர் காலத்தை சேர்ந்த அந்த சிற்பங்களில், கிரந்த மொழியிலான கல்வெட்டும், காணக்கிடைக்காத அரிய சோமாஸ்கந்தர், கொற்றவை, மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டா தேவி, பிரம்மன் ஆகிய சிலைகள், பராந்தக சோழன் கால கல்வெட்டு ஆகியவை குறிப்பிடத் தக்கவை. இந்த சிலைகளை மீட்டு, பாதுகாப்பான அருங்காட்சியகம் ஒன்றில், அவற்றை வைத்து, தமிழக வரலாற்றை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.