பதிவு செய்த நாள்
02
மே
2015
10:05
சிதம்பரம்: சிதம்பரம், நடராஜர் கோவில் மகா கும்பாபிஷேகம், (1.5.2015) அன்று நடந்தது. திரளான பக்தர்கள், தில்லைக் கூத்தனே; பொன்னம்பலத்தானே என, விண்ணை முட்டும் வகையில், பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
யாகசாலை பூஜைகள்: சிதம்பரம், நடராஜர் கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில், ஆகாய ஸ்தலமாக உள்ளது. இங்கு, 27 ஆண்டுகளுக்குப்பின், 40 கோடி ரூபாய் செலவில், திருப்பணி நடந்தது. பணிகள் முடிந்து, கடந்த மாதம், 25ம் தேதி, யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, 30ம் தேதி வரை, 12 கால யாகசாலை பூஜைகள் நடந்தன. 1.5.2015 அன்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, தேவசபையில் நடராஜருக்கு பழைய பொன் ஆபரணங்களை அணிவித்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின், சிவகாமி அம்மன் உடனுறை நடராஜப் பெருமான், தேவசபையில் இருந்து, சித்சபைக்கு எழுந்தருளினார். 1.5.2015 அதிகாலை, 4:00 மணிக்கு, யாக சாலையில், தம்பதி பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை உள்ளிட்ட, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், மேள தாளங்களுடன் கோபுரங்களுக்கு கடம் புறப்பாடானது. நேற்று காலை, 8:00 மணிக்கு, சித்சபை, கனகசபை, நான்கு ராஜகோபுரங்கள் உட்பட, ஏழு இடங்களிலும், ஒரே நேரத்தில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. குருமூர்த்தி தீட்சிதர் தலைமையில், தீட்சிதர்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றினர்.
தீபாராதனை: இதைத் தொடர்ந்து, கலசங்களுக்கு வஸ்திரம், பூமாலை அணிவித்து, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அரோஹரா கோஷம் எழுப்பினர். தில்லைக் கூத்தனே; பொன்னம்பலத்தானே என்ற பக்தி கோஷம், விண்ணை முட்டியது.