ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் நிகழ்ச்சி நடந்தது. அதில் 100க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கோவைமாவட்டத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அதற்காக இந்த கோவில் வளாகத்தில் 16 நிரந்தர உண்டியல்களும் தட்டு காணிக்கை உண்டியல்களும் வைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். கோவில் உதவி ஆணையர் கார்த்திக், கோவை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், பொள்ளாச்சி கோவில்ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
மொத்தம் உள்ள நிரந்தர 16 உண்டியல்களில் 30 லட்சத்து 35 ஆயிரத்து 527 ரூபாயை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். தட்டுக்காணிக்கை உண்டியலில், 12 லட்சத்து 11 ஆயிரத்து 347 ரூபாயை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். தங்கம் 220 கிராமும், வெள்ளி 320 கிராமும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தப்பட்டு இருந்தது. மாசாணியம்மன் கோவில் இந்தமாத உண்டியல் வருமானம், 42 லட்சத்து 46 ஆயிரத்து 874 ரூபாய்.