பதிவு செய்த நாள்
04
மே
2015
11:05
ஊத்துக்கோட்டை; சுந்தர வரதராஜ பெருமாளுக்கு, நான்காம் ஆண்டு, லட்சார்ச்சனை விழா, கோலாகலமாக நடந்தது. ஊத்துக்கோட்டை பிராமணத் தெருவில் உள்ளது, சுந்தர வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவிலில், சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி, நேற்று முன்தினம், நான்காம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது. அன்று, மாலை 3:00 மணிக்கு, மகா சாந்தி ஹோமம், மகா சாந்தி திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு லட்சார்ச்சனை விழா துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, காலை, 7:00 மணி முதல் 5:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. மாலை, 5:30 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. பின்னர் சுந்தர வரதராஜர் சேவா குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த, தாசுகுப்பம், சென்னேரி கிராமத்தில் உள்ள தேவி கிருஷ்ண மாரியம்மன் கோவிலில், 16ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவை ஒட்டி, கடந்த 1ம் தேதி, காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், கலச பூஜை, யாக பூஜை, அபிஷேக, ஆராதனையும் தொடர்ந்து கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மூன்றாம் நாளான நேற்று, காலை, 5:00 மணிக்கு, யாக பூஜையும், 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனையும், மதியம், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன. மாலை, 6:00 மணிக்கு, சீர்கொண்டு வருதல், தொடர்ந்து விளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.