பதிவு செய்த நாள்
05
மே
2015
10:05
திருச்சி: சித்ரா பவுர்ணமியையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில், கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.சாபத்தினால் யானையாகவும், முதலையாகவும் பிறந்த, இரு பக்தர்களுக்கு பெருமாள் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியே கஜேந்திர மோட்சம். நிகழ்ச்சிக்காக, நேற்று காலை, நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளினார். பின், அம்மாமண்டப கரையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். பகல், 12:00 மணி முதல் திருமஞ்சனம் கண்டருளினார்.அம்மா மண்டபத்தில் இருந்து மாலை, 6:00 மணிக்கு காவிரி ஆற்றுக்கு புறப்பட்டார். அங்கு, கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள், கஜேந்திரனாக திகழ்ந்தது. கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கு பின், நம்பெருமாள் இரவு, 9:15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.