பதிவு செய்த நாள்
05
மே
2015
10:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில், நேற்று அதி காலை 3.25 மணிக்கு பக்தர் களின் "கோவிந்தா கோஷம் முழங்க "கள்ளழகர் கருநீல பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். பரமக்குடி சவுராஷ்ட்ர பிராமண மகாஜனங்களுக்கு பாத்தியப்பட்ட, சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப். 29 ல் காப்பு கட்டுடன் தொடங்கியது. மே 3ல், பெருமாள், கருப்பண சாமிக்கு கும்பதிருமஞ்சனம் நடந்தது. நேற்று அதிகாலை 2 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் வேல், கம்பு, ஈட்டி, வளரி ஏந்தி, கோடாரி கொண்டையிட்டு, "கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்ப பல்லக்கில் எழுந் தருளினார். பின்னர் ஏராளமான தீ வட்டிகள் வெளிச்சத்தில், வான வேடிக்கைகள், மேள, தாளம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் "கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில், 3.25 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். பின்னர் கோயில் காவல் தெய்வம் கருப்பண்ண சாமியிடம், பெருமாள் விடை பெறும் வைபவம் நடந்தது. அப்போது "கள்ளழகர் கருநீல பட்டு உடுத்தி, சர்க்கரை பொங்கல், பால் சாப்பிட்ட படி வந்தார். இதனால் "இந்த வருடம் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிப்பதுடன், திருமண தடை நீங்கும் என்று, தேவஸ்தான அர்ச்சகர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று காலை 9.05 மணிக்கு பெருமாள் தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, பக்தர்கள் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீரை பீச்சியடித்து அழகரை வரவேற்றனர். பின்னர் காட்டுப்பரமக்குடி, மஞ்சள்பட்டினம் வழியாக ஆற்றுப்பாலம் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் மதியம் 2.15 மணிக்கு அருள்பாலித்தார். பின்னர் காக்காதோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். இரவு 7 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரம், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு, வைகை ஆற்று மணலில் 3 கி.மீ., தொலைவில் உள்ள, காக்கா தோப்பு பெருமாள் கோயில் வரை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி அகஸ்தியன், டிரஸ்டிகள் மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். இன்று தசாவதாரம்:
* குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை அணிவிக்கப்பட்டது.
* கோயில் சார்பில் சவுராஷ்ட்ர சேவா சமாஜ் இளைஞர்கள் உட்பட போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பில் ஈடு பட்டிருந்தனர்.
* அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கிய நிலையில் நேற்ற காலை வாட்டி வதைத்த வெயில், மதியம் அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் குளிர்ந்தது.
* இன்று இரவு 7 மணிக்கு மண்டூக மகரிஷி சாப விமோசனமும், விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சியும் நடக்கிறது.