பதிவு செய்த நாள்
05
மே
2015
10:05
கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ராபவுர்ணமி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள தமிழக வனப்பகுதியான வண்ணாத்திப்பாறை மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துஉள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும்.தமிழக, கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வர். கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை, கேரள வனப்பகுதி வழியாக இருப்பதால் விழா நடப்பதற்கு முன் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கான கட்டுப்பாடுகள் குறித்து, இரு மாநில கலெக்டர்கள் தலைமையில், பேச்சுவார்த்தை நடத்தி விழா கொண்டாடப்படும்.கேரள வனப்பகுதி வழி: நேற்று அதிகாலை 6 மணிக்கு கேரள மாநிலம் குமுளியில் இருந்து வனப்பகுதி வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். குமுளியில் இருந்து, 14 கி.மீ., தூரமுள்ள கோயிலுக்கு ஜீப்பிலும் நடந்தும் பக்தர்கள் சென்றனர். கொக்கரக்கண்டம் அருகே பக்தர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின் அனுமதிக்கப்பட்டனர். பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கேன்களை பறிமுதல் செய்தனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து வழிபட்டனர். மங்கலதேவி கண்ணகி அம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழக பூஜாரி சபரிநாதன் அர்ச்சனை செய்தார். காலையில் அம்மனுக்கு மலர் வழிபாடு, யாகபூஜை நடந்தது. பெண்களுக்கு மங்கல நாண், வளையல் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு வழிபாடும் பூமாரி விழாவும் நடந்தது.
மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், கும்பம் இட்டு யாக பூஜை நடத்தினர். குடந்தை தமிழ்ச்சங்கம் சார்பில் சிலப்பதிகார பாடல்கள் பாடப்பட்டன.பளியன்குடி வனப்பகுதி வழியாக தமிழக பக்தர்கள் அதிக அளவில் நடந்து வந்தனர். கண்ணகி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கூடலூரில் இருந்து பளியன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
கூடுதல் பக்தர்கள் வருகை:
*தேனி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்ததால், இந்த ஆண்டு அரசு ஊழியர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வந்தனர்.
*கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக கூடுதலான பக்தர்கள் நடந்து வந்தனர்.
* குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதையில், கொக்கரக்கண்டம் அருகே ரோடு, நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழையால் சேறும் சகதியாக
இருந்தது. இதனால், இப்பகுதியில் ஜீப் கடந்து செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டதில் 2 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
* மழை பெய்திருந்ததால் நடந்து சென்ற பக்தர்கள் அட்டைக்கடியால் சிரமத்திற்கு உள்ளாகினர்.
* குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்ல கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜீப் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் கூடுதலான பக்தர்கள் நடந்து சென்றனர்.
* மதுரை, நாகப்பட்டினத்தில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வந்தனர்.
* தமிழக பக்தர்கள் பொங்கல் வைக்க கெடுபிடி செய்த வனத்துறை நேற்று கண்ணகி கோயில் வளாகத்தில் கேரளா தரப்பில் பொங்கல் வைத்ததை கேரள வனத்துறையினர் கண்டுகொள்ளவேயில்லை.
* ஆண்டிபட்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,தங்க தமிழ்செல்வன், பளியன்குடி வழியாக 7 கி.மீ., தூரம் வனப்பகுதியில் நடந்து வந்து, கோயிலில் ஜெ., படத்தை வைத்து மீண்டும் முதலமைச்சராக வேண்டி சிறப்பு பூஜை நடத்தினார். உடன் ஏராளமான
அ.தி.மு.க.,வினர் வந்திருந்தனர்.
* கம்பம் தி.மு.க., எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், கோயிலுக்கு வந்து பளியன்குடி பாதையை விரைவில் சீரமைத்து தினமும் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வரும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார்.