பதிவு செய்த நாள்
05
மே
2015
11:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 39வது ஆண்டு பிரமோத்ஸவ விழாவையொட்டி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 39வது ஆண்டு பிரமோத்ஸவ விழா, அனுக்ஞை, விச்வக்சேன ஆராதனம், புண்யாக வாஜனம், வாஸ்து சாந்தி, கருட பிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கடந்த மாதம் 24ம் தேதி விழா துவங்கியது. தொடர்ந்து, 25ம் தேதி காலை, 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும்; மாலை, 5:00 மணிக்கு புண்யாக வாஜனம், ரட்சாபந்தனம், யாகசாலை துவக்கம், மாலை, 6:00 மணிக்கு திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், பெருமாள், தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. மே 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்றுமுன்தினம் காலை, 10:30 மணிக்கு மேல், 12:00 மணிக்குள் தேரில் ஏளப்பண்ணுதல், வடம்பிடித்தல், மாலை, 6:00 மணிக்கு திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, நேற்று காலை, 6:00 மணிக்கு தீர்த்த வாரி நிகழ்ச்சியும், மாலை, 3:30 மணிக்கு துவாதச ஆராதனம், கண்டருலுதல், மாலை, 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.