கூடலூர்: கூடலூர் கூடலழகிய பெருமாள் கோயில் சித்ராபவுர்ணமி விழாவில் இரவு முழுவதும் உற்சவர் சுவாமி ரதவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. கூடலூர் கூடலழகிய பெருமாள் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இக்கோயிலில் சித்ராபவுர்ணமி விழா நேற்று முன்தினம் துவங்கியது. மாலை கோட்டை கருப்பசாமி கோயிலில் பொங்கல் வைத்து விழாவை துவக்கினர். உற்சவர் சுந்தர்ராஜ் பெருமாள் தாயார் சம்மேதமாய் திருக்கோயிலில் இருந்து, அண்ணல் பேயத்தேவர் நினைவாக மண்டகப்படி எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பேயத்தேவரின் ஆண் வாரிசுகள் பால்குடம், தயிர்குடம், விதைப்பு எடுத்து வந்து சுவாமிக்கு திருமஞ்சனம், தீப ஆராதனை செய்தனர். கொசவபட்டியார் பங்காளிகள் கும்புகோயில் மாடு பிடித்து வந்து சுவாமிக்கு மரியாதை செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு உற்சவர் சுவாமி ரதவீதி புறப்பாடு நடந்தது. ரதவீதிகளில் ஊர்வலமாக வந்து மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளினார். பல்வேறு சமுதாயத்தினரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு முழுவதும் ஊர்வலமாக வந்து சுவாமி திருக்கோயில் அர்த்த மண்டபத்தில் வந்து சேர்ந்தது. பேயத்தேவர் பெண்வாரிசுகள் சார்பில் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அண்ணல் பேயத்தேவர் ஆண் வாரிசுகள் சித்ராபவுர்ணமி திருவிழாக்குழுவினர் செய்திருந்தனர்.