புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில், நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று மாலை 3:00 மணிக்கு, அர்ச்சுனன்– திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் முத்துப்பல்லக்கில் வீதியுலா நடந்தது. வரும் 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.