பதிவு செய்த நாள்
07
மே
2015
11:05
வாலாஜாபாத்: பராமரிப்பு இன்றி சீரழிந்து வரும், கீழ் ஒட்டிவாக்கம் பீமேஸ்வரர் கோவிலை, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வியப்பு: வாலாஜாபாத் அடுத்த, கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பீமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், முழுவதும் கருங்கற்களால் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டு உள்ளது.இங்குள்ள மூலவர் பீமேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இக்கோவிலின் நுழைவு வாயில் தெற்கு புறமாக உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் உள்ளதாகவும்; அந்த நிலத்தில் குறைந்த வருவாய் வருவதாகவும்; தற்போது, கிராமவாசிகளின் கட்டுப்பாட்டில் கோவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு கால பூஜைக்கு கூட வழி இன்றி, பீமேஸ்வரர் கோவில் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும்,கோவிலுக்கு செல்லும் வழியில், வேலி காத்தான் செடிகள் புதர் மண்டி காணப்படுவதால், கோவிலுக்கு செல்லும் பாதை மறைந்து உள்ளது. பழமை வாய்ந்த கற்கோவில், சீரழிந்த நிலையில் இருப்பது, இந்து சமய அறநிலைய துறைக்கு அதிகாரிகளுக்கு தெரியாமல் இருப்பது வேடிக்கையாகவும்; வியப்பாகவும் உள்ளது.
கோரிக்கை: எனவே, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்து, துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவும்; சிதிலமடைந்த நிலையில் இருக்கும் கோவிலை புதுப்பிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.